மாநில பொதுத்துறை நிறுவனங்களை இனி ஈஸியாக கண்காணிக்கலாம்! முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய வலைதளம்!
தமிழ்நாடு அரசின் நிதித்துறை உருவாக்கிய புதிய வலைதளம்.
சென்னை: மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசின் நிதித்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைதளத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;
மேலும், தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள "Companies Compliances and Financials Monitoring System" www.ccfms.tn.gov.in என்ற வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.
நிறுவனங்களின் விதிகளை பின்பற்றுதல் மற்றும் நிதி கண்காணிப்பு முறைமை (Companies Compliances and Financials Monitoring System) வலைதளம். தமிழ்நாட்டில் தற்போது 66 மாநில பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனங்கள் செயல்படுவதை கண்காணிப்பதற்காக நிதித்துறையால் உருவாக்கப்பட்டுள்ள "நிறுவனங்களின் விதிகளை பின்பற்றுதல் மற்றும் நிதி கண்காணிப்பு முறைமை" (Companies Compliances and Financials Monitoring System) www.ccfms.tn.gov.in என்ற வலைதளத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இப்புதிய வலைதளம், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்களின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை அரசிடம் எளிதாக பகிர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மென்பொருள் பல்வேறு தகவல்களை சேகரிக்கவும், நிறுவனங்கள் சட்டம் 2013 இன் விதிமீறல்களை அடையாளம் காணவும், அந்தந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் தொடர்புடைய முக்கிய அலுவலர்களுக்கு தானியங்கி எச்சரிக்கை குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் செய்திகளை உருவாக்கவும், அதன்மூலம் அத்தகைய விதிமீறல்களை சரிசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.