3வது முறையாக கூடுகிறது திட்டக்குழு கூட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்ட திட்டக்குழு இன்று 3வது முறையாக கூடுகிறது.
மாநிலத்தின் வளர்ச்சி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், புதிய திட்டங்கள், வருவாய் அதிகரிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனைகளை வழங்க இந்த திட்டக்குழு கூட்டம் கூட்டப்படுகிறது. திட்டக்குழுவின் தலைவர் என்கிற முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் இக்கூட்டத்திற்கு தலைமையேற்பார். காலை 10 மணியளவில் இக்கூட்டம் சென்னை எழிலகத்தில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தின் துணை தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், முழுநேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில், வேளாண் துறை கொள்கை மற்றும் திட்டங்கள், தொழிற்சாலைகள் - மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை, நில உபயோகம், ஊரக மேம்பாட்டுத்துறை, நலவாழ்வு மற்றும் சமூக நலத்துறை, கல்வித்துறை, மாவட்டத் திட்டக் குழு போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே மின் கட்டண உயர்வு, மின்சார பற்றாக்குறை, உதய் திட்டம் என மின்சார துறை மீது தொடர்ச்சியான விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும், போக்குவரத்து தனியார்மயம் தொடர்பாக தொமுச மற்றும் கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கங்களே போராட்டங்களை நடத்தியது. இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications