சம்பவம் செஞ்சுட்டு.. சாமியாராக மாறி 2 வருசம் ஓட விட்ட ஓட்டேரி ரமேஷ்.. இந்த என்ட்ரிய எதிர்பார்க்கலையே
சென்னை: சென்னை ஓட்டேரியில் மனைவியை கொன்றுவிட்டு போலீசுக்கு பயந்து சாமியாராக மாறி இருக்கிறார் ரமேஷ். இவர் காவி உடை அணிந்து, தாடி வளர்த்து ஊர் ஊராக சுற்றி வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் வாணி என்பவரை கடந்த 18 வருடங்களுக்கு முன்பு காதலித்து கல்யாணம் செய்தார். இவர்களுக்கு கவுதம், ஹரிஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடம் முன்பு ரமேஷ் மற்றும் வாணி இடையே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரத்தில் ரமேஷ் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். பின்னர் தனது மகன்கள் இருவரையும் தவிக்கவிட்டுவிட்டு அப்படியே தப்பி ஓடிவிட்டார், இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தாய், தந்தை இல்லாமல் தவித்து வந்தார்கள். தலைமறைவான ரமேஷை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ரமேஷ் எங்கு இருக்கிறார் என்பது குறித்து போலீசாருக்கு எந்த தகவலும் கிடைக்கவிலலை. ஊர் ஊராக சுற்றிய ரமேஷ் ஒரு கட்டத்தில் செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார். பெற்ற பிள்ளைகளையும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் அவரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறிப்போனார்கள். இதுஒருபுறம் எனில், ரமேஷ் தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக முகத்தில் அதிகமான தாடியை வளர்க்க தொடங்கினார். அத்துடன் காவி உடைந்து சாமியார் போல் மாறினார். ஒரு கட்டத்தில் போலீசாருக்கு ரமேஷ் சாமியார் வேடத்தில் சுற்றுவது தெரியவந்தது.
இதனிடையே நீண்ட நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்த ரமேஷை உடனே பிடிக்க சென்னை மாநகரக போலீஸ் கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து ரமேஷ் குறித்து தகவல்களை திரட்டியதுடன், அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
தனிப்படை அமைப்பு: இணை கமிஷனர் ரம்யா பாரதி, துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சாமியாராக மாறிய ரமேஷை தீவிரமாக தேடத்தொடங்கினர். ரமேஷ், திருவண்ணாமலை, வடலூர், சதுரகிரி உள்பட சாமியார்கள் அதிகமாக தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று காவி உடையில் அடையாளம் மாறிப்போய் யாசகம் கேட்டு அந்த பணத்தை வைத்து சாப்பிட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது,
கூகுள் பே மூலம் பணம் : இதனிடையே மகன்களுக்கு தான் யாசகம் பெற்ற பணத்தை கூகுள் பே மூலம் தன் மகன்களுக்கு அனுப்பும்படி ரமேஷ், இன்னொரு நண்பரான சாமியாருக்கு கூறியிருக்கிறார். அதன்படி பணம் மகன்களுக்கு வந்துள்ளது. இதையடுத்து சாமியாரின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர்.
சிக்கியது எப்படி : இந்நிலையில் ரமேஷ் சாமியார் வேடத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆசிரமத்துக்கு செல்ல இருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போலீசார் இன்று அதிகாலை கண்காணித்தனர். ரமேஷ் சாமியார் வேடத்தில் அங்கு வந்த போது இன்ஸ்பெக் டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications