திடீரென தீப்பிடித்த பஸ்.. கிளம்பிய கரும்புகை.. முடங்கிய சென்னை -பெங்களூர் நெடுஞ்சாலை.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை குன்றத்தூரில் இருந்து வேலூரை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏசி வசதி உள்ளது. இந்த பஸ்சை நீலகண்டன் என்பவர் பேருந்து ஓட்டினார். ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் சிலை அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று பேருந்தில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நீலகண்டன் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் பேருந்து தீப்பிடித்து எரிய துவங்கியது. சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் இருங்காடு கோட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் பஸ் முற்றிலுமாக எரிந்தது. பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. பேருந்தில் இருந்து புகை வந்ததை உணர்ந்து ஓட்டுனர் நீலகண்டன் உடனடியாக வெளியேறியதால் அவரும் தப்பித்தார். பேருந்தின் முன்பகுதியில் பிடித்த தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் பஸ் முழுவதும் தீக்கிரையானது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை.
இந்த விபத்து காரணமாக சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் கரும்புகை வெளியானது. மேலும் பாதுகாப்பு கருதி தீப்பற்றி எரிந்த பேருந்து அருகே பொதுமக்கள், வாகன ஓட்டிகளை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.