என் வீட்டு தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்.. திமுக ஆ.ராசா இப்படி சொன்னதுமே உடனே வந்த விசிக
சென்னை: விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தவெக அமைச்சரவையில் இணைந்தது திமுக தரப்பில் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.. இதையடுத்து திமுக எம்பி ஆ.ராசா சோஷியல் மீடியாவில் பரபரப்பான பதிவு ஒன்றை போட்டு, அதை நீக்கியும் உள்ளார்.. பிறகு மற்றொரு பதிவையும் பதிவிட்டுள்ளார். திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? தகவல்களை இங்கே பார்க்கலாம்..
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.. ஆனால் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை இல்லாமல் போய்விட்டது.

எனவே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் அரசு அமைந்தது.. தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாகவும், வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாகவும் சொல்லி வந்த விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திடீர்னு தவெக அமைச்சரவையில் இணைந்தது. அப்போது முதலே கூடுதல் பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது.
திமுகவில் விமர்சனங்கள்
தவெக அமைச்சரவையில் விசிகவின் வன்னியரசுக்கு சமூக நீதித்துறையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஷாஜஹானுக்கு சிறுபான்மையின நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.. இந்த திருப்பம் திமுக தரப்பில் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே திமுக எம்பி ஆ.ராசா, காட்டமான ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.
அதில், விசிலுக்கு முட்டுக்கொடுக்கும் ஏணி, சிறுத்தை என்று உள்ளடக்கத்துடன் பதிவிட்டிருந்த நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.. இதனால் அந்த பதிவை நீக்கினார்..
என் வீட்டு தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்
பிறகு ஆ.ராசா, புதிதாக இன்னொரு பதிவை போட்டார்.. "என் வீட்டு தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் முடத்தெங்கு என பெயர்.. இலக்கியத்தில் முடத்தெங்கு - அரசியலில் என்ன பெயர்?" என்று கேட்டிருக்கிறார்..
இந்த உவமை நேரிடையாக யாரை குறிக்கிறது என்று பெயர் சொல்லவில்லை என்றாலும், அரசியல் ஆர்வலர்கள் அதை விசிக மீதான சாடலாகவே புரிந்துகொள்கிறார்கள்.. திமுக கூட்டணியில் வளர்ந்து, தவெக அமைச்சரவையில் பலன் அனுபவிக்கிறார்கள் என்பதுதான் அந்த குற்றச்சாட்டின் சாராம்சம் என்கிறார்கள்.
விசிகவின் பதில் என்ன?
கூட்டணியில் உள்ள சில கட்சிகள், புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வரும் சூழலில் இந்த பதிவு வெளியானதால் அதன் பின்னணி குறித்து பல்வேறு விளக்கங்கள் வெளியாகி வருகின்றன..
இதற்கு விசிக தரப்பிலிருந்தும் பதிலடிகள் கிளம்பி உள்ளன.. "அதிகாரம் எளியவருக்கு போகிறது. அதிலென்ன ஆத்திரம்?" என்று இணையத்தில் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன..
தமிழக அரசியலை பொறுத்தவரை, கூட்டணி நடைமுறை எப்போதும் சிக்கலானதாகவே இருந்திருக்கிறது.. ஒரு தேர்தலில் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள், ஆட்சி கிடைத்ததும் வேவ்வேறு பாதை தேடுவது புதிதல்ல.. ஆனால் "வெளியில் இருந்து ஆதரிக்கிறோம்" என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்ததுதான், திமுக தரப்பினருக்கு, குறிப்பாக ஆ.ராசா போன்ற மூத்த தலைவர்களுக்கு சரிவர ஜீர்ணிக்கவில்லை என்பதை இந்த பதிவுகள் உணர்த்துகின்றன..
இனிவரும் நாட்களில் திமுக, விசிக, தவெக ஆகிய மூன்று முனைகளிலும் அரசியல் சமன்பாடு எப்படி பரிணமிக்கும் என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications