நாளை வானில் நடக்கப்போகும் அதிசய நிகழ்வு! வெறும் கண்களில் பார்க்கலாம்.. ப்ளூ மூன் பற்றி தெரிஞ்சுக்கோங்க
சென்னை: நாளை ப்ளூ மூன் எனப்படும் நீல நிலவு தோன்ற இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது இந்தியாவிலும் தெரியும் என்றும், அதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மனிதனுக்கும் நிலவுக்குமான தொடர்பு என்பது ஏறத்தாழ மனித இனம் உருவான காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. அதாவது மனித இனத்தின் வயது தோராயமாக 3 லட்சம் வருடங்களாகும். அதேபோல மனிதனுக்கும் நிலவுக்கும் இடையேயான தொடர்பின் வயதும் 3 லட்சம் வருடங்களாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏனெனில், ஆதி மனிதன் நிலவை புரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அவனுடைய வாழ்விட எச்சங்களிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எனவே நிலவு குறித்த தொடர்ந்து ஆய்வுகள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ப்ளூ மூன் எனப்படும் வானியல் அதிசயம் நாளை நிகழ உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ப்ளூ மூன் என்பது ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் வரும்போது ஏற்படும் அபூர்வ நிகழ்வாகும். ப்ளூ மூன் 2.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். "ப்ளூ மூன்" என்ற சொல்லுக்கும் சந்திரனின் நிறத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதாவது ப்ளூ மூன் என்றால், நிலவு நீல நிறமாக தெரியும் என்று அர்த்தமல்ல. ஒரே மாதத்தில் இரண்டு முறை பௌர்ணமி ஏற்படும். இதில் இரண்டாவது நிலவு ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.
பூமிக்கும் நிலவுக்கும் 3,84,400 கி.மீ தொலைவு இருக்கிறது. பூமிக்கு நெருக்கமாக வரும் நிகழ்வை பெரிஜி என்று கூறுகிறார்கள். இந்த சமயத்தில் நிலவு 3,56,400 கி.மீ என நெருக்கமாக வரும். தொலைவாக இருக்கும் நிகழ்வை அபோஜி என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் நிலவு 4,05,500 கி.மீ தொலைவில் இருக்கும். இதே ப்ளூ மூன் நிகழ்வின்போது நிலவு வழக்கத்தைவிட 30% பிரகாசமாகவும், 14% நெருக்கமாகவும் தெரியும்.
இந்த நிகழ்வுக்கு ப்ளூ மூன் என்று பெயர் வந்தது வித்தியாசமான கதை. அதாவது 1883ம் ஆண்டில் இந்தோனேசியாவின் க்ரகடோவா எரிமலை வெடித்து 80 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியது. ஒரு மைக்ரான் அளவு கொண்ட சிறிய சாம்பல் துகள்கள் வானை முற்றிலுமாக மறைத்தன. அப்போது முழு நிலவு தோன்றியது. ஆனால் சாம்பல் காரணமாக நிலவு நீல நிறத்தில் தோன்றியது.
அதேபோல 1980 இல் செயின்ட் ஹெலன்ஸ் மவுண்ட் எரிமலை வெடிப்பு, 1983 இல் மெக்சிகோவில் எல் சிச்சோன் எரிமலை வெடிப்பு, 1991ல் பினாடுபோ எரிமலையின் வெடிப்பின்போதும் முழு நிலவு தோன்றியிருந்தது. அப்போதெல்லாம் நிலவு நீல நிறத்தில் தெரிந்ததால், ப்ளூ மூன் என்கிற பெயர் உருவாகியுள்ளது. அதுவே இப்போதும் அழைக்கப்படுகிறது.
நாளை வரும் ப்ளூ மூனை, இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மக்கள் பார்க்க முடியும். இதை வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications