எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அப்பப்போ கோஷ்டி சண்டைகள்தான்.. அல்லோகலப்படுவதே அதிமுக வரலாறு
சென்னை: அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர். மறைவைத் தொடர்ந்து அவ்வப்போது கட்சி யாருக்கு என்று எழும் பிரச்சனைகளால் ரத்த பூமியாக அதிமுக தலைமை அலுவலகம் போர்க்களமாகிப் போவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றிய போதும் போர்க்களமாக அப்பகுதியே காட்சி அளித்தது.
Recommended Video
அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக எம்ஜிஆர் இருந்த போதும் அவருக்கு எதிரான குரல்களும் அக்கட்சியில் இருந்தன. அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது உடனிருந்தவர்கள் திமுகவுக்கே மீண்டும் திரும்பிப் போயினர். ஆனால் அதிமுகவில் தொண்டர்கள் பலம் கொண்டவர்களாக அவர்கள் இருந்தது இல்லை.
ஜெயலலிதாவை அதிமுகவுக்குள் எம்ஜிஆர் கொண்டுவந்த போது மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.டி.சோமசுந்தரம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் அதிமுகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார். அப்போது அதிமுக தலைமை அலுவலகப் பிரச்சனை வந்தது இல்லை. எம்ஜிஆர், ஆர்.எம்.வீ உட்பட பல மூத்த அமைச்சர்களை ஒட்டுமொத்தமாக அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்த போது கூட அதிமுகவில் பிரளயம் ஏற்பட்டது இல்லை.

கீழே தள்ளிவிடப்பட்ட ஜெ.
அதிமுக மறைந்த நாளில் இருந்தே அக்கட்சிக்கும் மோதல்களுக்கும் பஞ்சமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சென்னை ராஜாஜி அரங்கத்தில் எம்ஜிஆர் உடலுக்கு அருகே ஜெயலலிதாவை நிற்கவிடக் கூடாது என்பதில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையாரின் ஆதரவாளர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தடுத்தும் பார்த்தனர். ஆனால் ஜெயலலிதா இரும்புப் பிடியாக அங்கேயே நின்றிருந்தார். அதன் பின்னர் எம்ஜிஆரின் உடலை ராணுவ வண்டியில் ஏற்றும் போது ஜெயலலிதாவும் அதில் ஏற முயன்றார். ஆனால் அந்த ராணுவ வண்டியில் இருந்து அப்படியே கீழே தள்ளிவிடப்பட்டார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதாவின் ஆதரவாளர்களை இது பெரும் கோபத்துக்குள்ளாக்கியது. இந்த சம்பவம்தான் அதிமுகவை இரண்டாக பிளவுபடுத்தியது.

ஜானகி, ஜெ. அணிகள்
அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி இரண்டாகப் பிளவுபட்டது. சட்டசபையில் இரு கோஷ்டிகளும் மோதிக் கொண்ட சம்பவம் தமிழக சட்டசபை வரலாற்றில் கறுப்பு அத்தியாயமாகும். சட்டசபைக்குள் நுழைந்து எம்.எல்.ஏக்களை போலீஸ் தடியடி நடத்தி விரட்டியது. இதன் பின் அதிமுக கொடி, சின்னம், தலைமை அலுவலகம் என அத்தனைக்கும் மோதல் ஏற்பட அத்தனையுமே முடங்கிப் போனது. 1989-ம் ஆண்டு தேர்தலில் ஜானகி அணிக்கு இரட்டைப் புறா, ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னம் ஒதுக்கப்பட்டது. தேர்தலுக்குப் பின்னர் ஜானகி அணி தோற்றதால் ஜெயலலிதா அணியே உண்மையான அதிமுக என்றானது. ஜானகி அம்மாள் அரசியலுக்கு முழுக்குப் போட அதிமுக சின்னம், தலைமை அலுவலகம், கட்சி அத்தனையும் ஜெயலலிதாவின் வசமானது.

எஸ்டிஎஸ்-அரங்கநாயகம் மோதல்
என்னதான் ஜெயலலிதா ஆளுமை மிக்க தலைவராக இருந்தாலும் அவருக்கும் எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. அதுவும் ஜெயலலிதாவின் வலதுகரங்களாக இருந்த திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அதிமுகவில் தூக்கியடிக்கப்பட அப்போது நால்வர் அணி உதயமானது. இந்த நால்வர் அணி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்ற போது மிகப் பெரும் ரத்த களறி ஏற்பட்டது. இந்த ரத்த களறிக்கு முன்னணி தளபதிகளாக இருந்தவர்கள் வயது முதிர்ந்த எஸ்டிஎஸ், அரங்கநாயகம் போன்றவர்கள். அப்போது போலீஸ் உடனேயே அங்கே நின்று நிலைமைகளை கட்டுப்படுத்தியது.

தினகரன் கோஷ்டி
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராக பதவியேற்ற ஓபிஎஸ், சசிகலாவுக்காக அப் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ். ஆனாலும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அவர் உரிமை கோரவில்லை. ஒருகட்டத்தில் தினகரன் அதிமுகவில் போர்க்கொடி தூக்கிய போது, தலைமை அலுவலகம் குறித்த பஞ்சாயத்து மீண்டும் வெடித்தது. அதிமுக தலைமை கழகம் தமக்கே சொந்தம் என உரிமை கோரினார் தினகரன். பின்னர் தினகரன், அமமுக என தனிக்கட்சி தொடங்கினார். அதே கால கட்டத்தில் சசிகலா புஷ்பா, கலகக் குரல்எழுப்பிக் கொண்டிருந்தார். அவரது முன்னாள் கணவர், பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கான மனுவை வாங்க வந்த போது கடுமையாகத் தாக்கப்பட்டார்.

ரத்த பூமியான அதிமுக ஆபீஸ்
இதன்பின்னர் சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்னர் எப்போது வேண்டுமானாலும் அதிமுக தலைமை அலுவலகம் செல்வார் என கூறப்பட்டே வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகள் பகிரங்கமாக வெடித்தன. அண்மையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தின் போது ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்த படம் வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று அதிமுக பொதுக்குழு ஒரு பக்கம் நடக்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு அதிமுக தலைமை கழகத்தைக் கைப்பற்றியது. இதற்கு இபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்க இருதரப்பும் இடையே மோதல் வெடித்தது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. கத்திக்குத்து சம்பவங்களும் நிகழ்ந்தன. இப்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ் தேர்வாகி உள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு என்கிற விவகாரமும் பூதாகரமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications