முருங்கை மரம் ஏறிய வேதாளம்...மேகதாது அணையில் கர்நாடகா பிடிவாதம்... இதுவரை நடந்தது என்ன?
சென்னை: தமிழகம்- கர்நாடகா இடையே மீண்டும் காவிரி பிரச்சனை மேகதாது அணை விவகாரத்தால் வெடித்துள்ளது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் அணை கட்டவே கூடாது என்ற ஒப்பந்தங்களை மீண்டும் மீண்டும் மீறிக் கொண்டிருக்கிறது கர்நாடகா.
மேகதாது அணை விவகாரம் தொடர்பான முக்கிய நிகழ்வுகள்:

2013: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு ஆட்சேபனை கடிதம் அனுப்பினார்.
2014: காவிரியில் கர்நாடகாவின் உரிமையை விட்டுத் தர முடியாது; மேகதாது அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவோம் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் பேசியது சர்ச்சையானது.
2015: மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தஞ்சாவூர், திருவாரூர், நாகை என தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
2015 ஏப்: லோக்சபாவில், 2014ம் ஆண்டு பிப்ரவரியில் காவிரியின் குறுக்கே சிவசமுத்திரம் திட்டத்தை செயல்படுத்தும் திட்ட அறிக்கையை நீர்வள ஆணையத்துக்கு கர்நாடகா அனுப்பி வைத்திருந்தது என மத்திய அமைச்சர் சன்வார்ல் லால் ஜாட் தெரிவித்தார்.
2016 ஜூன்: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேகதாது அணையை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். ஆனால் காவிரியில் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்றார் கர்நாடகா அமைச்சரான பி.எம். பாட்டீல்.
2017 பிப்: சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அமைச்சரவை, மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது.
2018 பிப்: தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே அணைகளை கட்டக் கூடாது என்கிற ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2018 ஜூன்: உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் படி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு.
2018 செப்: கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி, மேகதாது பிரச்சனை தொடர்பாக தமிழகம்- கர்நாடகா இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தினார்.
2018 செப்: தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கர்நாடகாவின் மேகதாது அணையை கட்டுவோம் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
2018 டிச: திருச்சியில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் மேகதாது அணைக்கு எதிராக போராட்டம் நடத்தின. மேகதாது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கர்நாடகா அழைப்பு விடுத்தது.
2021: மேகதாது அணையை கட்டியே தீருவோம்; கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக பாஜக அரசு திட்டவட்டம். மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கடிதம்.
2021 ஜூலை 4: மேகதாது அணை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்
2021 ஜூலை 6: டெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முகாம். மத்திய அரசு மேகதாது அணைக்கு அனுமதி அளிக்காது என மத்திய அமைச்சர் ஷெகாவத் தன்னிடம் தெரிவித்ததாக தமிழக அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அறிவித்தார்.; யார் தடுத்தாலும் மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா பிடிவாதம்.












Click it and Unblock the Notifications