தந்தன..தந்தன! திருவிழானாலே கொண்டாட்டம் தானே! பள்ளிகளில் கலைத் திருவிழா! கல்வித்துறை வெளியிட்ட வீடியோ
சென்னை : தமிழகத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பாக அத்துறை சார்பில் மாணவிகள் நடனமாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து தமிழகம் முழுவதிலுமுள்ள பள்ளிகள் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு மாணவ மாணவிகள் தங்கள் கலைத் திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிந்தனையில் மாற்றம்! சமூகத்தின் ஏற்றம்! ஆவின் பால் பாக்கெட்களில் பள்ளிக் கல்வித்துறை பளிச் வாசகம்!
பள்ளிக் கல்வித் துறை
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கலைத் திருவிழா குறித்து போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் பங்கேற்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் "கலைத் திருவிழா" என்னும் பெயரில் நடைபெற உள்ளது. 6 முதல் 8 ஆம் வகுப்பு, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளாக போட்டி நடத்தப்படவுள்ளது.
கலைத் திருவிழா
வட்டார அளவிலான போட்டிகளில் முதல் இரு இடங்களை பெறும் தனிநபர் மற்றும் குழுவினர் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் இடத்தை பெரும் தனிநபர் மற்றும் குழு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஓவியம், கேலிச்சித்திரம், நவீன ஓவியம், களிமண் சிற்பம், மணல் சிற்பம், புகைப்படம் எடுத்தல், நாட்டுப்புறப்பாட்டு, மெல்லிசை, செவ்வியல் இசை என பல்வேறு கலைத்திறன்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.
வெளிநாடு சுற்றுலா
மாநில அளவிலான கலைத் திருவிழாவின் இறுதி போட்டிகள் வரும் ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் 'கலையரசன்', 'கலையரசி' என்ற விருதுகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இது தொடர்பாக பேசியுள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி," தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி பள்ளிகளில் கலைத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வரும் நிலையில் திருவிழா என்றாலே கொண்டாட்டம்தான். ஏட்டுக்கல்வி மட்டுமல்ல பாட்டுக் கல்வியும் ஒன்றாக இணையும் போது உற்சாகம் கிடைக்கும். இந்த நல்ல நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்று வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
வீடியோ
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதன் ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கலைத் திருவிழாக்களின் வீடியோ வெளியிடப்பட்டு வருகிறது குறிப்பாக கலைத் திருவிழா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் உற்சாக நடனமாடும் வீடியோ வெளியிடப்பட்டு அது வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளதோடு, தங்களுக்கும் மீண்டும் பள்ளி செல்ல வேண்டுமென்ற எண்னம் ஏற்பட்டுள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.