காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்தி வழக்கு.. புகார் அளித்த பெண் சென்னை ஹைகோர்டில் புது வழக்கு
சென்னை: சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரிக்கு எதிராக அளித்த பாலியல் பலாத்கார புகாரின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி புகாரளித்த பெண் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு நான் அடிக்கடி சென்று வருவேன். அங்கு கோயில் பூசாரியாக கார்த்திக் முனுசாமி என்பவர் உள்ளார்.

அவர் என்னுடன் நட்பாக பழகினார். இதனால் நான் கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் அவரிடம் பேசுவேன். ஒரு நாள் நான் கோயிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் என்னை அவருடைய காரில் வீட்டில் விடுவதாக என்னிடம் கூறினார். நானும் அவரை நம்பி காரில் ஏறினேன். பிறகு திடீரென அவருடைய வீடும் இந்த வழியில்தான் இருக்கிறது.
ஒரு முறை வீட்டுக்கு வந்துவிட்டு என்னிடம்கூறினார். நானும் அவரது வீட்டுக்கு அன்று சென்றேன். அங்கு அவர் ஒரு தீர்த்தத்தை கொடுத்தார். அதை குடித்ததும் நான் மயங்கினேன். பிறகு சிறிது நேரம் கழித்து நான் கண் விழித்து பார்த்த போது அவர் வீட்டு படுக்கை அறையில் நான் உடலில் ஆடை இல்லாமல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அப்போது கார்த்திக்கிடம் கேட்ட போது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அவருடைய மனைவி இருந்த போதும் எனக்கு அவருடைய வீட்டில் தாலி கட்டினார். பிறகு நாங்கள் இருவரும் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தினோம். இதில் நான் கருவுற்றேன். ஆனால் அவர் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார்.பின்னர் என்னை விஐபி ஒருவரின் வீட்டுக்கு அழைத்து சென்று அவருடன் நெருக்கமாக இருக்க சொன்னார். என்னை அவருடைய தோழி மூலம் பாலியல் தொழிலுக்கு தள்ள பார்த்தார். இதற்கு மறுத்த போது கார்த்தி முனுசாமியின் மனைவி, இதையெல்லாம் வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார்.
இதனால் மனமுடைந்த நான் கோயில் தலைமை குருக்களான காளிதாஸ் என்பவரிடம் போய் முறையிட்டேன். அவரோ கார்த்திக்கை திட்டுவது போல் திட்டிவிட்டு, அவரோடு குடும்பம் நடத்தியதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என என்னிடம் கேட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். என் வாழ்க்கையை சீரழித்த கார்த்திக் முனுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை போலீசார் தீவிரமாகதேடி வருகிறார்கள். மேலும் கார்த்திக் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. முன் ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த சாலை கிராமத்தைச் சேர்ந்த பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். தான் புகார் அளித்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த மனுவில், புகார் அளித்ததற்காக கார்த்திக் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், தான் அளித்த புகார் அடிப்படையில் கார்த்திக்கை இன்னும் காவல்துறை கைது செய்யவோ, அவரிடம் விசாரணை நடத்தவோ இல்லை எனவும், மிகவும் மெத்தனமாக காவல்துறையினர் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications