விஜய் ரசிகை கீதா.. 'சென்னை தியேட்டரின் உச்சியில்'.. காப்பாற்ற போன பெண் இன்ஸ்பெக்டருக்கு ட்விஸ்ட்
சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சூலையப்பன் தெருவைச் சேர்ந்த கீதா என்பவர் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள எம்.எம். தியேட்டருக்குள் திடீரென ஓடினார். அங்கு 4வது மாடியில் ஏறி நின்ற கீதா, நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்று கூறி தியேட்டரின் 4-வது மாடியில் ஏறி நின்று மிரட்டல் விடுத்தார். அப்போது அவரை காப்பாற்ற முயன்ற பெண் இன்ஸ்பெக்டரை, அந்த பெண் தள்ளிவிட்டார். இதில் பெண் இன்ஸ்பெக்டருக்கு கை முறிந்தது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சூலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி கீதா, 31 வயது ஆகிறது. இதில் சிவானந்தம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார். அதன்பிறகு கீதா, தனது 9 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். கீமா நேற்று தனது தந்தையுடன் ஆட்டோவில் வெளியே சென்றார். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போயிருக்கிறார்.. அப்போது கீதா, திடீரென ஆட்டோவில் இருந்து இறங்கி அருகில் உள்ள தனியார் தியேட்டருக்குள் வேகமாக ஓடினார்.

கீதா மின்னல் வேகத்தில் ஏறி அந்த தியேட்டரின் 4-வது மாடிக்கு சென்றார். பின்னர் "நடிகர் விஜயை பார்க்க வேண்டும்" என்று கூறி கூச்சலிட்டார். பின்னர், அங்கிருந்து கீழே குதிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதனால் தியேட்டர் ஊழியர்கள், படம் பார்க்க வந்தவர்கள், பொதுமக்கள் ஆடிப்போனார்கள்..
இதுபற்றி தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காப்பாற்ற முயற்சித்தனர் பெண் இன்ஸ்பெக்டர் சஜிதா, தியேட்டரின் 4-வது மாடிக்கு சென்று கீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து கீதாவை அவர் சமாதானம் செய்து அழைத்து வந்தார். மாடியில் உள்ள படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்த கீதா, திடீரென ஆவேசமாகியதுடன், இன்ஸ்பெக்டர் சஜிதாவை படியில் இருந்து பிடித்து கீழே தள்ளிவிட்டார். இதில் இன்ஸ்பெக்டர் சஜிதாவிற்கு வலது கையில் எலும்பு முறிந்தது.
அங்கிருந்த சக போலீசார், பெண் இன்ஸ்பெக்டரை தண்டையார்பேட்டையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் கீதாவையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications