மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை வாங்க வேண்டும்.. வானதி சீனிவாசன் சொல்றதை நோட் பண்ணீங்களா
சென்னை: மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை கடையில் சரக்கு வாங்கும் போது இணைக்க வேண்டும். அதிகமாக குடித்து விட்டு இறந்து போனால் அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு சம்பாதித்தது எல்லாம் அரசுக்கு தான் கொடுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் எந்த ஒரு காரணத்திற்காக அரசாங்கம் மதுக்கடைகளை நடத்துகிறதோ.. அதற்கு முரணாக கள்ளச்சாராய சாவுகள் தமிழகத்திலும் ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது.
இங்கு ஏன் மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என்று கேட்டால் அரசு சொல்லும் ஒரே பதில் கள்ளச்சாராயம்.. இதனால் பெருகும் அதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அரசு கடையை நடத்தி விட்டு அதற்கு பின்பாகவும் கள்ளச்சாராய சாவுகள் நடக்கிறது என்றால் முழுமையாக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டாலும் தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்பு நடந்து மக்கள் கவனத்திற்கு வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை யார் வேண்டும் என்றாலும் செய்யலாம். ஆளும் கட்சி ஆதரவோடு கள்ள சாராய விற்பனை நடப்பதாக நிறைய தகவல்கள் வருது.
மது விலக்கு பிரிவுக்கு சுதந்ந்திரம் கொடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக பாஜக ஆளுநரை சந்தித்து மனு கொடுத்துள்ளது. உள்ளாட்சி துறை அமைச்சர் விமானத்தில் வரும் போது அவரிடம் கோரிக்கை வைத்தேன் ஒவ்வொரு முறை சட்டப்பேரவையிலும் கோவையில் சாலைகளுக்காக ரூ.200 கோடி ஒதுக்கப்படுவதாக சொல்கிறீர்கள்.
ஆனால் இதுவரைக்கும் அந்த சாலைகளை பார்க்க முடியவில்லை என்று கேட்டேன். அவரும் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியை நம்பி வர எந்த ஒரு அரசியல் கட்சியும் தயாராக இல்லை. அவர்கள் கூடும் கூட்டத்திற்கு போவார்கள். காங்கிரஸ் மேடையில் நிற்பார்கள். ஆனால் தேர்தல் களம் என்று வரும் பிராந்திய கட்சிகளை எதிர்த்துதான் காங்கிரஸ் நிற்கிறது.
ஒரு கர்நாடக வெற்றியை மற்றும் வைத்துக் கொண்டு மோடியை வீழ்த்தி விடலாம் என கனவு காண்கிறார்கள். எதிர்க்கட்சிகள் இன்று மேடையில் பார்க்கும் கட்சிகள் மட்டும் இல்லை.. இன்னும் பெயருக்காக கட்சி நடத்துபவர்களை அழைத்துக் கொண்டு வந்தாலும் மோடி அடுத்த முறையும் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

கடந்த முறை பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட போது என்ன நன்மை கிடைத்தது என்றால் யார் யாரிடம் பணம் இருக்கிறது.. யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்ற முழு கணக்குகள் வந்து விட்டது. இன்றைக்கு 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறுவதால் ஏழைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக்க வில்லை. வங்கிகளில் செலுத்திக் கொள்ளலாம்.
இந்த நாட்டில் உள்ள 95 சதவிகிதம் பேருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. யாருக்கு பிரச்சினை என்றால் 2 ஆயிரம் நோட்டுகளை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்து இருப்பவர்களுக்கு தான் பிரச்சினை. அதனால் 2 ஆயிரம் நோட்டுக்கள் எங்கே இருந்து வருகிறது என்பதனை கண்காணித்தால் போதும் அதற்கு பிறகு நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம். கள்ளசாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் அரசு கொடுக்கிறது.
நல்ல சாராயம் குடித்துக் கொண்டும் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால், மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை கடையில் சரக்கு வாங்கும் போது இணைக்க வேண்டும். அதிகமாக குடித்து விட்டு இறந்து போனால் அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு சம்பாதித்தது எல்லாம் அரசுக்கு தான் கொடுக்கிறார்கள். ஏனென்றால் அரசாங்கம் இது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். இளம் விதவைகள் அதிகமாக இருக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications