ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு.. சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக சென்னை முகப்பேர் கிழக்கு, மடிப்பாக்கம், பூந்தமல்லி உள்பட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. பொதுமக்களிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளனர், அந்த பணத்தை எந்தெந்த நாடுகளுக்கு சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்துள்ளனர் என்பது தொடர்பாக சோதனை நடப்பதாக தெரிகிறது.
அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.2,400 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக, சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வந்த ஆருத்ரா நிறுவனம் மீது புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 2020 - 2022 ஆம் ஆண்டுகளில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆருத்ரா நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய பாஸ்கர், மோகன் குமார், செந்தில் குமார், மைக்கேல் ராஜ், ஹரி, கூடுதல் இயக்குநர்களான மாலதி, செந்தாமரை, நாகராஜ், பேச்சிமுத்துராஜா, உதயகுமார், அசோக்குமார் ராஜா உள்ளிட்டோரும், அந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜசேகர் என்பவரையும் துபாயில் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை ரொக்கமாக ரூ.60 கோடியும், தங்க நகை 3,716 கிராம், வெள்ளி பொருட்கள் 5,007 கிராம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல் வங்கியில் இருந்த ரூ.102 கோடி முடக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை இன்று சோதனை மேற்கொண்டுள்ளது. சென்னை மடிப்பாக்கம், முகப்பேர் கிழக்கு, பூந்தமல்லி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களிடம் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளனர், அந்த பணத்தை எந்தெந்த நாடுகளுக்கு சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்துள்ளனர் என்பது குறித்து சோதனை முடிவில் தெரியவரும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications