ஐஸ்கிரீம் விலை எகிறுது.. வெயில் வெளுக்கும்போது ஷாக் கொடுத்த ஆவின்! நாளை முதல் விலை உயர்வு அமல்!
சென்னை: ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி பால் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பால் உபபொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகள் மிகுந்த தரத்துடன், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அதன் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.
பால்கோவா, நெய், வெண்ணெய், மில்க் ஷேக், ஹெல்த் மிக்ஸ், யோகர்ட், பால் பிஸ்கட், சாக்லேட், குல்பி, கப் ஐஸ்கிரீம், சாக்கோ பார், சாக்கோ பீஸ்டு, கசாட்டா, கேன்டி, ப்ரீமியம் உள்ளிட்ட சுமார் 100 வகையான பால் பொருட்களை ஆவின் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் ஐஸ்கிரீம் விலை ரூபாய் 2 முதல் 5 வரை விலை உயர்கிறது. இந்த விலை உயர்வு நாளை (மார்ச் 3) முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ரூபாய் 5 உயர்ந்து ரூபாய் 25க்கும், ஆவின் வெண்ணிலா பால் விலை ரூ.2 உயர்ந்து 30 ரூபாய்க்கும், வெண்ணிலா கிளாசிக் கோன் விலை ரூ.5 உயர்ந்து ரூபாய் 35க்கும், கிளாசிக் கோன் சாக்லேட் ரூ. 5 உயர்ந்து ரூபாய் 35க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஆவின் பால் பொருட்களின் சுவைக்கென தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை விரும்பி வாங்கும் பொதுமக்கள் இந்த விலை உயர்வு அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications