ஆவினில் வரப்போகுது மூலிகை பால்.. அமைச்சர் மனோ தங்கராஜ் கொடுத்த முக்கியமான அப்டேட்!
சென்னை: ஆவின், விரைவில் மூலிகை பால் அறிமுகம் செய்ய உள்ளது. மக்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் அஸ்வகந்தா பால், மஞ்சள் மிளகு பால் உள்ளிட்ட மூலிகை பால் அறிமுகம் செய்வது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கூட்டமைப்பு (ஆவின்) சார்பில், 2024-25 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் நேற்று சென்னை நந்தனத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சி பெற்ற களப்பணியாளர்களுக்கு பால் சேகரிக்கும் கருவிகள், பரிசோதனை கருவிகள், பசுந்தீவன புல் ரேக், பாலுக்கு பாரம்பரிய கால்நடை மருத்துவம் ஆகியவற்றில் சான்றிதழ், கூட்டுறவு சங்கங்களுக்கு மூலிகை மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், பால் கடைகளில் ஊட்டச்சத்து டானிக் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ஆவினில் தினசரி 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் பால் உப பொருள்களின் விற்பனை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு போல் இல்லாமல் நடப்பு ஆண்டில் பண்டிகை நாட்களில் மக்களுக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் தடையின்றி விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் தயாராக உள்ளது என்றார்.
மேலும் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், கடந்த ஆண்டு, ஆவின் தினசரி பால் கொள்முதல் ரூ.26 லட்சமாக சரிந்தது. தற்போது தினமும் 35 லட்சம் முதல் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பால் கொள்முதல் மேலும் அதிகரிக்கும். சென்னை பகுதியில் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் பால் வழங்குவதற்கான இலக்கை வெற்றிகரமாக எட்டிய பிறகு, ஆவின் அதன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளை வலுப்படுத்த கவனம் செலுத்தி வருகிறது. ஆவின் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

மேலும், பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும், புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றும், மக்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக மூலிகைப் பாலை அறிமுகப்படுத்த தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம். அஸ்வகந்தா பால், மஞ்சள் மிளகு பால் போன்ற மூலிகை பால் வகைகளை அறிமுகப்படுத்த உள்ளோம், சுக்குமல்லி காபி வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications