ஒரேயடியாக ரூ.100 வரை அதிகரித்த ஆவின் பால் பொருட்கள் விலை.. அதிரடி முடிவால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!
சென்னை: ஆவின் பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ஆவின் விலை உயர்வு பொதுமக்களை அவதியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் தினசரி 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனத்தில், பால் தவிர மோர், தயிர், வெண்ணெய், நெய், லஸ்ஸி, பனீர், யோகர்ட், பாதாம் பவுடர், குலாப் ஜாமுன் மிக்ஸ், பால் பவுடர், ஐஸ் கிரீம்கள், சாக்லேட்கள், குலாப் ஜாமுன், பால்கோவா, பால்பேடா, மைசூர்பாகு, ரசகுல்லா, மில்க் ஷேக் போன்ற பலவகையான பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆவினில் விற்கப்படும் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. அதன்படி, ஆவின் விற்பனையகங்களில், இந்த பொருட்கள் மீதான விலை ரூ.20 முதல் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவின் பன்னீர் ஒரு கிலோ விலை ரூ.450 என இதுவரை விற்கப்பட்டு வந்த நிலையில், ரூ.550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பன்னீர் அரை கிலோ விலை ரூ.250இல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பன்னீர் 200 கிராம் விலை ரூ.100இல் இருந்து ரூ.120ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பாதாம் மிக்ஸ் 200 கிராம் விலை 100 ரூபாயில் இருந்து ரூ.120ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பால் பொருட்களின் விலையும் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications