என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை.. பின்னோக்கி ஓடியதை போல் உணர்ந்தேன்.. டிவில்லியர்ஸ்!
சென்னை: நான் எப்படி ரன் அவுட் ஆனேன் என தெரியவில்லை. நான் 2ஆவது ரன் எடுக்க ஓடும் போது பின்னோக்கி ஓடுவதை போல் உணர்ந்தேன் என பெங்களூர் அணியின் டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. பெங்களூர் அணியின் மிடில் ஆர்டரில் களம் இறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் கடைசி ஓவரின் 4ஆவது பந்தில் ரன் அவுட் ஆகி 48 ரன்களில் வெளியேறினார்.
அந்த 48 ரன்களில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்சல் படேல் களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்.
கேப்டன் கோஹ்லி
மேலும் அந்த அணியில் சிறப்பாக ஆடிய கேப்டன் கோஹ்லி 33 ரன்களிலும் மேக்ஸ்வெல்லில் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முன்னதாக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
தூக்கி அடித்தார்
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் மார்கோ ஜென்சன் வீசிய 4-ஆவது பந்தை டிவில்லியர்ஸ் அடித்து விட்டு ரன் எடுக்க ஓடிக் கொண்டிருந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் ஃபீல்டர் குருனால் பாண்டே பந்தை தடுத்து வீச அதை லாவகமாக பிடித்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் ஸ்டம்பில் அடித்தார். இதில் டிவில்லியர்ஸ் ரன் அவுட் ஆனார்.
ரன்னிங் பயிற்சி
ரன்- அவுட் குறித்து டிவில்லியர்ஸ் வர்ணனையாளர்களுடன் சிரித்து கொண்டே கூறுகையில், முன்பெல்லாம் டிரெட் மில்லில் ரன்னிங் பயிற்சி எடுத்தேன். ஆனால் அது கடினமானதாக இல்லை. அதனால் எனக்கு அதில் திருப்தியில்லை. தற்போது மணலில் ரன்னிங் பயிற்சி எடுக்கிறேன்.
பின்னோக்கி ஓடுவது..
ரன் அவுட் எப்படி ஆனேன் என எனக்குத் தெரியவில்லை. நான் பந்தை தட்டிவிட்டு ஓடினேன். அப்போது இரண்டாவது ரன் எடுக்க ஓடத் தொடங்கிய போது நான் பின்னோக்கி ஓடுவதைப் போல உணர்ந்தேன். குருனால் வீசியது நல்ல த்ரோ என்றார். அடுத்த வாரம் புதன்கிழமை ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்து ஆர்சிபி மோதுகிறது குறிப்பிடத்தக்கது.