சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம்
சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த ஏசி மின்சார ரயில் பாஸ்ட் ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் இயக்கப்படுவதால், 2 மணி நேரத்திற்குள் பயண இலக்கை அடையும். இதனால் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்கை வகிப்பது புறநகர் மின்சார ரயில்கள்தான். சென்னை பீச் - தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

செண்ட்ரல் - அரக்கோணம்: ஏசி மின்சார ரயில்
தொழில், வியாபாரம், கல்வி, மருத்துவம் என பல்வேறு காரணங்களுக்காவும் சென்னைக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு இந்த புறநகர் மின்சார ரயில்கள் பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. பேருந்துகளில் வந்தால் மணிக்கணக்கில் டிராபிக் நெரிசலில் சிக்கி கால தாமதம் ஆகும். ஆனால் ரயில்கள் என்றால் பெரும்பாலும் திட்டமிட்டபடி வந்து சென்றுவிடலாம் என்பதால் பயணிகள், ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.
இதனால் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுவதை காண முடியும். சென்னை செண்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் கடற்கரை - செங்கல்பட்டு ரூட்டில் இயக்கப்படுவது போல ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்தது.
பாஸ்ட் ரயில்கள் வழித்தடத்தில் இயக்கப்படும்
இதை ஏற்று ஏசி மின்சார ரயில்களை இயக்குவதற்கான பணிகளை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தொடங்கினர். மின்சார ரயில்கள் ரெடியான நிலையில், கடந்த ஜனவரி மாதமே சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஏசி மின்சார ரயிலின் சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றுள்ளது.
எனவே இன்னும் சில நாட்களில் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் வழக்கமான புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்படும் டிராக்கில் இயக்கப்படாது எனவும், பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படும் வழித்தடத்தில்தான் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2 மணி நேரத்தில் சென்றுவிடும்
இதனால், அனைத்து ஸ்டேஷன்களிலும் நிற்காமல் சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்ல உள்ளது. பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்றும் செல்லும் வகையில் இது இயக்கப்பட உள்ளது. இதனால், இந்த ரயில் சென்னை செண்ட்ரல் - அரக்கோணத்திற்கு வெறும் 2 மணி நேரத்தில் சென்றுவிடும்.
தற்போது செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் 3 மணி வரை எடுத்துக்கொள்கின்றன. ஏசி மின்சர ரயிலின் குறைந்தபட்ச வேக வரம்பாக 90 கி.மீட்டர் இருக்கும் எனவும், அதிகபட்சமாக 110 கி.மீட்டர் வரையிலும் செல்லும் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறினர். மேலும், சோதனை ஓட்டத்தின் போது பாதையின் நிலைத்தன்மை, சிக்னல் ஒருங்கிணைப்பு மற்றும் வேக வரம்புகள் உள்ளிட்ட அம்சங்களும் பரிசோதிக்கப்பட்டன என்று அதிகாரிகள் கூறினர்.
பயணிகள் மகிழ்ச்சி
ஆவடி ஷெட்டில் இருந்து அரக்கோணம் வரையில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. விரைவில் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதுவும் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கும் நிலையில், கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதோடு, குளு குளுவென ஏசியில் பயணிக்க முடியும் என்பதால் பயணிகள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications