சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் விபத்து.. கீழே விழுந்த ராட்சத தூண்கள்.. ஒருவர் பலி
சென்னை: சென்னை ராமாபுரம் அருகே போரூர் எல்.என்.டி நிறுவனத்தின் முன்பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது இரண்டு பெரிய ராட்சத தூண்கள் திடீரென கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளார். அந்த சாலையில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் பரபரப்பாக சென்று வரும் நிலையில் திடீரென விழுந்த ராட்சத தூண்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 4 மோட்டார் சைக்கிள்கள் சிக்கியதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பேர் சிக்கியதாக கூறப்படுகிறது. மெட்ரோ கட்டுமான விபத்தால் பூந்தமல்லி - மவுண்ட் சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் அப்பகுதிகளில் மக்கள் வராதபடி தடுப்புகளை அமைத்துள்ளனர். மேலும் போக்குவரத்தை சீர்படுத்தி மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

மெட்ரோ ரயில் பணிகள்
சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது ராட்சத தூண்கள் இடிந்து விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான சாலையில் திடீரென ராட்சத தூண்கள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் பணியானது பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடந்து வருகிறது.
இதில் ராமாபுரம் அருகே போரூர் எல்.எண்.டி என்ற கட்டுமான நிறுவனம் முன்பகுதியில் தான் இன்று இரவு திடீரென மேலே இருந்து ராட்சத தூண்கள் அடுத்தடுத்து கீழே விழுந்திருக்கின்றன. இரவு நேரம் என்பதால் குறைவான வாகனங்கள் அதில் சென்றதாக தெரிகிறது. எனினும் 4 இருசக்கர வாகனங்கள் உள்ளே சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஒருவர் பலி
வாகன நெரிசல் மிகுந்த இடத்தில் திடீரென ராட்சத தூண்கள் விழுந்த சம்பவம் அறிந்ததும், பல்வேறு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக பறக்கும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக காலை, இரவு என பணிகள் விறுவிறுப்பாக தொடர்ந்து நடந்து வருகின்றன.
தண்டவாளம் அமைக்கும் பணி, தடுப்பு சுவர்கள், ராட்சத தூண்களை ஒரு பிள்ளரில் இருந்து மற்றொரு பிள்ளருக்கு இணைப்பாக வைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக ராட்சத கிரேன்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் தான் இதில் இரண்டு 35 அடி நீள ராட்சத தூண்கள் மேலே இருந்து கீழே விழுந்துள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
ராட்சத தூண்களை உடைத்து அங்கிருந்து அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக இந்த தூண்கள் கீழே விழுந்ததில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மெட்ரோ கட்டுமான விபத்தால் பூந்தமல்லி - மவுண்ட் சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.












Click it and Unblock the Notifications