நெல்லை அரசு பள்ளியில் மீண்டும் ஜாதிய மோதல்.. எடப்பாடி அதிர்ச்சி.. தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை
சென்னை: திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சி அடைந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:- திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் திரு. ஸ்டாலின், தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ளது.

ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை: இந்த நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது. சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.
எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இடையே தகராறு: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மருதகுளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 2 ஊரை சேர்ந்த மாணவர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் மூன்றடைப்பு காவல்துறை மூலம் மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் 2 தரப்பை சேர்ந்த மாணவர்கள் திடீரென்று மோதிக்கொண்டனர்.
மருத்துவமனையில் அனுமதி: இந்த தாக்குதலில் பொன்னாக்குடியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு 2 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மூன்றடைப்பு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாதி ரீதியான தாக்குதல்கள்: நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி பகுதியில் பள்ளிக்கூடங்களில் ஏற்கனவே ஜாதி ரீதியான தாக்குதல்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போதும் அரசு பள்ளிக்கூடத்தில் 2 பிரிவு மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications