தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கும் ஆக்டிவ் கேஸ்கள்.. சென்னையின் நிலைதான் மிக மோசம்..ஷாக் ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை நெருங்குகிறது.
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தினசரி கொரோனா பரவல் 3.46 லட்சமாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினசரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 13,776 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் பதிவு செய்யப்பட்ட கொரோனா உயிரிழப்புகள் 78ஆக அதிகரித்துள்ளது. அதேபோல நேற்று ஒரே நாளில் மட்டும் 8,078 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாநிலத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 89,28ஆக இருந்தது. இது ஒரே நாளில் 95,048ஆக அதிகரித்துள்ளது. அதில் கிட்டதட்ட பாதி பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாநிலத்திலுள்ள சுகாதார கட்டமைப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எச்சரிக்கை
மேலும், தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு வரும் மே 15ஆம் தேதி 19 ஆயிரமாக அதிகரிக்கலாம் எனத் தேசிய தொற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 1.25 லட்சமாக உயரும் எனவும் இதனால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நோய் பரவலைச் சென்னையில் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

சென்னை
தற்போதும் தலைநகர் சென்னையிலேயே கொரோனா தொற்று மோசமாக உள்ளது. நேற்று மட்டும் சென்னையில் புதிதாக 3842 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்த நிலையில், 2820 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தலைநகர் சென்னையில் தற்போது 31170 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications