"இனி நண்பனை எப்போது பார்ப்பேன்".. சோகத்துடன் வெற்றி துரைசாமியின் வீட்டிற்கு வந்த அஜித்குமார்
சென்னை: தனது நண்பர் வெற்றி துரைசாமியின் மறைவை அடுத்து அவரது தந்தை சைதை துரைசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நடிகர் அஜித்குமார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் "என்றாவது ஒரு நாள்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் தனது அடுத்த படத்தை இயக்குவதற்காக இமாச்சல் பிரதேசத்திற்கு தனது உதவியாளருடன் சென்றிருந்தார்.

அங்கு அவர்கள் இருவரும் வாடகை காரில் சென்ற போது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென கார் தாறுமாறாக ஓடி 200 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இதில் ஓட்டுநர் டென்சின் சடலமாக மீட்கப்பட்டார். வெற்றியின் உதவியாளர் காயங்களுடன் ஆற்றின் கரையில் மீட்டெடுக்கப்பட்டார்.
ஆனால் வெற்றியை மட்டும் காணவில்லை என்பதால் அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தை அறிந்த வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி இமாச்சல் சென்றிருந்தார். அங்கு மீட்பு பணிகளை பார்வையிட்ட அவர் தனது மகனுக்காக காத்திருந்தார். ஆனால் 2, 3 நாள் ஆனது. இதையடுத்து தனது மகனை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ 1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் வெற்றியின் புகைப்படத்தை உள்ளூர் மக்களிடமும், பழங்குடியின மக்களிடமும் போலீஸார் கொடுத்து தேட சொன்னார்கள். ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணியும் நடைபெற்றது. கார் விழுந்த இடத்திலிருந்து 15 கி.மீ. தூரத்திற்கு தேடினர். ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை. அவருடைய ஐபோனும் உடமைகளும் பெட்டியும் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து நேற்று 8ஆவது நாள் மீண்டும் தேடுதல் வேட்டை நடந்தது.
அப்போது ஸ்கூபா டைவ் வீரர்களை கொண்டு ஆற்றின் ஆழத்தில் வெற்றியை தேடும் பணிகள் நடந்தன. ஒரு பாறையின் அடியில் ஒரு உடல் சிக்கியிருந்தது. அதை கரைக்கு கொண்டு வந்த போது வெற்றி என அடையாளம் காணப்பட்டது. இதை போலீஸ் உயரதிகாரிகளும் உறுதிப்படுத்திய பிறகு வெற்றியின் உடல் கிடைத்த விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்தது.
வெற்றியின் உடல் இன்றைய தினம் இமாச்சலில் இருந்து நாக்பூர் வந்து அங்கிருந்து சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் வருகிறது. மாலை 4 மணிக்கு அவருடைய உடல் வந்ததும் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை சிஐடி நகர் வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் அவருடைய உடல் மாலை 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த நிலையில் தாம்பரத்தை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கத்தில் உள்ள வெற்றியின் பண்ணை வீட்டிற்கு நடிகர் அஜித் வந்திருந்தார்.
அவர் வெற்றியின் நண்பர். இருவரும் சேர்ந்து நிறைய சுற்றுலாக்களுக்கும் சாகசம் செய்வதற்காகவும் சென்றுள்ளனர். இதை வெற்றியே கடந்த 2021 ஆம் ஆண்டு தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் வெற்றி இறப்பு குறித்து அறிந்த அஜித் மிகவும் சோகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து வெற்றியின் தந்தைக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற அஜித் குமார் ராஜகீழ்ப்பாக்கத்திற்கு சென்றுள்ளார். வெற்றியின் திருமணத்திற்கும் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வந்திருந்தார். விபத்தில் இறந்த வெற்றிக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications