அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு.. எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறிய அஜித்குமார்!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் மறைவுக்கு தொலைபேசி வாயிலாக எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு அஜித்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அஜித்குமாரின் தந்தை பெயர் சுப்ரமணியம் மார்ச் 24ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி சுப்ரமணியம் நடிகர் அஜித்குமாரின் பெசன்ட் நகர் வீட்டில் உயிரிழந்தார். இதனையடுத்து நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள், குடும்பத்தினர் மட்டும் பங்கேற்ற இறுதிச்சடங்கு நடைபெற்றது.

அஜித்குமார் தந்தை உயிரிழப்பு
வீட்டிலிருந்து மின் மயானத்துக்கு ஆம்னி வேனில் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சுப்ரமணியம் உடல் கொண்டு செல்லப்பட்டது. மின் மயானத்தின் வாசலில் இருந்து அவரின் உடலை அஜித்குமார் சோகத்துடன் சுமந்து சென்றார். பின்னர் எந்த பரபரப்பும் இல்லாமல் சுப்ரமணியத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நேரில் சென்ற ஜெயக்குமார்
நடிகர் அஜித்குமார் தந்தை சுப்ரமணியத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

ஆறுதலும், வாழ்த்தும்
இந்த நிலையில் தந்தை சுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது நடிகர் அஜித்குமார், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அரசியல் சர்ச்சைகளில் சிக்காத அஜித்குமார்
எப்போதும் அரசியல் குறித்த சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து விலகியே இருக்கும் நடிகர் அஜித்குமார், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியுள்ளது பேசுபொருளாகி உள்ளது. முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த போது, பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த அஜித்குமார், சென்னை திரும்பிய பின்னர் குடும்பத்துடன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications