யாராக இருந்தாலும் மரபை காக்கணும்.. நேரலை கட் ஆனது ஏன்? ஒரே ட்வீட்டில் ஆளுநர், திமுகவை விளாசிய விஜய்!
சென்னை: ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும், சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்.
தமிழ்நாடு சட்டசபையின் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்பது மரபு. இதையடுத்து இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் ஜனவரி 6 ஆம் தேதியான இன்று நடைபெறும் எனவும் ஆளுநர் ஆர்என் ரவி சட்டப்பேரவை தயாரித்துக் கொடுத்த உரையை வாசிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். அப்போது சபை நிகழ்வுகள் நேரலை செய்யப்படாத நிலையில், தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அவையை விட்டு ஆளுநர் வெளியேறினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி:
அவையில் தமிழ் தாய் வாழ்த்து பாடியவுடன் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என ஆளுநர் கூறியதாகவும், இது தொடர்பாக சபாநாயகர் முதலமைச்சரிடம் கூறியும் அவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் வேதனையுடன் ஆளுநர் வெளியேறியதாக சென்னை ராஜ் பவன் விளக்கம் அளித்து இருந்தது. 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரையே ஆளுநர் புறக்கணித்தது அரசியலில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் ஆளுநர் உரை தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஆளுநருக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின் கண்டனம்:
இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. "தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!" என கூறியிருந்தார்.
தவெக விஜய்:
இந்நிலையில், ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய்," தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும்.
மரபை காக்க வேண்டும்:
ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
நேரலை ஒளிபரப்பு:
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications