2வது முறையாக ஏமாந்துவிட்டேன்.. சதி செய்து தனிமைப்படுத்தினாங்க! துரோகம்! யாரை சொல்கிறார் பாக்யராஜ்?
சென்னை: நான் இரண்டாவது முறையாகவும் ஏமாந்துவிட்டேன். சதி செய்து என்னை தனிமைப்படுத்திவிட்டார்கள் என இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் கே பாக்யராஜும் எஸ்.ஏ. சந்திரசேகரும் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவராக ஆர் கண்ணன், காரைக்குடி நாராயணன் போட்டியிடுகிறார்கள். '
அது போல் செயலாளர்கள் பதவிக்கு லியாகத் அலிகான், பாலசேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இணைச் செயலாளர் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துராமலிங்கம், ரத்னகுமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

நாளை தேர்தல்
இந்த தேர்தல் நாளை சென்னை மியூசிஸியன் யூனியனில் நடைபெறுகிறது. இந்த நிலையில் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் இன்று சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாக்யராஜ் கலந்து கொண்டு தனது அணியின் போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

ஒருத்தர் நம்மை
அப்போது அவர் பேசுகையில் யாராவது ஒருத்தர் நம்மை முதல்முறையாக ஏமாத்திவிட்டால், அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என சொல்லலாம். அதே நபர் இரண்டாவது முறையாகவும் ஏமாற்றினால், அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என சொல்லக் கூடாது. நான் இரண்டாவது முறை ஏமாந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். எதிரியை கூட மன்னித்துவிடலாம், துரோகியை மன்னிக்கவே முடியாது.

தொல்லை
அவர்கள் என்னை ஏதாவது செய்ய வேண்டும் என தொல்லை கொடுத்தனர். எனக்கு எதிராக சதி செய்து தனிமைப்படுத்தினார்கள். ஆனால் நான் ஒவ்வொரிடமும் பேசி அணி சேர்த்து வைத்துள்ளேன். தற்போது தேர்தலை சந்திக்கிறேன். நான் எந்த சங்கத்திலும் இருக்கக் கூடாது எனன கங்கணம் கட்டி வேலை செய்து வருகிறார்கள். அது மிகவும் கஷ்டம்.

எம்ஜிஆர் பிரேஸ்லெட்
நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் சொல்லும் போது எம்ஜிஆர் பிரேஸ்லெட், மோதிரம், செயின் போட்டதாக சொன்னார்கள். என்னடா இது நாம் கூடவே இருந்துள்ளோம், நம்மிடம் ஒரு செயின், பிரேஸ்லெட், மோதிரம் இல்லையே. இதை எம்ஜிஆரிடமே கேட்டுவிடலாமா கேட்டு விடலாமா என யோசித்தேன். ஆனாலும் அவர் நம்மிடம் நன்றாக பழகுகிறாரே என்பதால் எதையும் கேட்கவில்லை.

தேடி வரும்
ஒரு திடீரென என்னுடைய கலை வாரிசு பாக்யராஜ்தான் என அறிவித்திருந்தார். நல்ல வேலை வாயை திறந்து செயின் மோதிரம் என எதுவும் கேட்காமல் இருந்ததற்கு எனக்கு இவ்வளவு பெரிய வரமா என நினைத்தேன். அதனால் யாருக்கு எது தேடி வரும் என இருந்தால் அது வந்தே தீரும், யாராலும் அதை தடுத்து நிறுத்த முடியாது என பாக்யராஜ் தெரிவித்தார். பாஜகவில் இணைந்திருந்த பாக்யராஜ் அண்மையில் ஓபிஎஸ்ஸை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications