நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ல் தீர்ப்பு! குடும்ப நல கோர்ட்டில் நடந்தது என்ன?
சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர்.
தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை, இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 21 ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் மூன்றாவது முறையாக ஆஜராகவில்லை என்பதால் விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த விசாரணைக்கு இருவரும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த மூன்று முறையும் தனுஷ்- ஐஸ்வர்யாவை ஒன்று சேர்க்க சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்கு இருவருமே உடன்படவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் இந்த முறை ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதாலும், சமாதான பேச்சுவார்த்தைக்கு உடன்படாததாலும் இன்று ஐஸ்வர்யா கோர்ட்டில் ஆஜராகினார். நடிகர் தனுஷ் தரப்பில், வழக்கறிஞர் கெளதம் S ராமன், ஐஸ்வர்யா தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகியிருந்தனர்.
ஐஸ்வர்யாவை அவருடைய வழக்கறிஞர் இளம்பாரதி உள்ளே அழைத்துச் சென்றார். இந்த நிலையில் தனுஷ் படப்பிடிப்பு முடித்துவிட்டு வந்துக் கொண்டிருப்பதாக ஆஜராக கால அவகாசம் வேண்டும் என தனுஷ் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதை அடுத்து பகல் 12 மணிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து தனுஷ் சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவரை வழக்கறிஞர் கௌதம் உள்ளே அழைத்துச் சென்றார். இருவரும் நீதிபதி சுபாதேவி முன்பு ஆஜரான நிலையில் அவர்கள் இருவரையும் தனியே பேச அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறினர். இதையடுத்து இருதரப்பிடமும் கையெழுத்து பெறப்பட்டு இந்த வழக்கில் வரும் நவம்பர் 27 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து முதலில் தனுஷும் , பிறகு ஐஸ்வர்யாவும் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தனர். சேர்ந்து வாழ இருவரும் விரும்பாததால் வரும் 27ஆம் தேதி தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து கிடைத்துவிடும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications