ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்.. நலம் விசாரித்த பின் போட்ட பதிவு! என்ன சொல்லி இருக்காரு பாருங்க
சென்னை: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் திடீரென்று சந்தித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் கமல்ஹாசன் நலம் விசாரித்தார். பிறகு சந்திப்பு தொடர்பான விஷயத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திடீர் தலைச்சுற்றல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 7 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய ஸ்டாலினிடம் அரசியல்கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள முதல்வர் ஸ்டாலினின் முகாம் அலுவலகத்துக்கு இன்று மாலையில் கமல்ஹாசன் சென்றார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து நலம் விசாரித்தார். இந்த வேளையில் ஸ்டாலின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து அதுதொடர்பான போட்டோவை கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதில், ‛‛மக்களின் முதலமைச்சர், அன்பு நண்பர் எம்கே ஸ்டாலினை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் புத்துணர்ச்சியோடு மக்கள் பணிக்குத் திரும்பியதில் பெருமகிழ்ச்சி. ஆனந்தமான இந்த உரையாடலின்போது துணை முதல்வர் தம்பி உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தது கூடுதல் மகிழ்ச்சி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கமல்ஹாசன் தனது கட்சியை திமுக கூட்டணியில் சேர்த்தார். அவருக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. அதன்படி சமீபத்தில் நடந்த தமிழக ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் போட்டியின்றி தேர்வானார்.
அதன்பிறகு கடந்த 25ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்ற கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்று கொண்டார். கமல்ஹாசன் தமிழ் மொழியில் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்று கொண்டார். ராஜ்யசபா எம்பியான பிறகு முதல் முறையாக அவர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications