கால் வலியுடன் வந்தேன்! போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் எங்கே! கஞ்சா கருப்பு வாக்குவாதம்
போரூர்: போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என அங்கிருந்த செவிலியர்களுடன் நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போரூர் அரசு மருத்துவமனைக்கு காது வலிக்கு சிகிச்சை பெற நடிகர் கஞ்சா கருப்பு 10 மணிவாக்கில் சென்றிருந்தார். அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அவர் செவிலியர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

அங்கிருந்த நோயாளிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கஞ்சா கருப்பு கூறுகையில், நான் கால் வலிக்காக போரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அங்கு சித்த மருத்துவர் மட்டுமே இருந்தார்.
"காலை 8 மணிக்கு வர வேண்டிய மருத்துவர் மதியம் 3 மணிக்குத்தான் வருவார்" என்றார். காலை 7 மணி முதலே மண்டை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட நோயாளிகளும் ரத்த வாந்தி எடுத்த மூதாட்டியும் காத்திருந்தனர்.
நாய்க்கடியால் பாதித்தவர்: ஆனாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க யாரும் வரவில்லை, மேலும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ஒருவரும் அமர்ந்திருந்தார். இப்படி அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க யாருமே இல்லை. இது வேதனையை அளிக்கிறது.
மற்ற ஊர்களில் எல்லாம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் மட்டும் சில இடங்களில் இது போன்ற நிலை உள்ளது. ஏன் சென்னையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் சம்பளம் வாங்கவில்லையா?
வரிப்பணத்தில் ஊதியம்: நம் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு தான் வைத்திருக்கும் கிளினிக்கில் சிகிச்சை கொடுத்துவிட்டுதான் அரசு மருத்துவமனைக்கு வருவார் என்றால் அப்படிப்பட்ட மருத்துவமனையே தேவையில்லை. இதை மூடிவிடலாமே, ஆபத்து நேரத்தில் மருத்துவர்கள் இல்லாத நிலையால் 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
உயிருக்கு போராடினால் சிகிச்சை இல்லை: அவர்கள் எல்லாம் தற்போது வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிருக்கு போராடிய மூதாட்டியை நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையிலிருந்து வேறு மருத்துவமனைக்கு அங்கிருந்த பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்த மருத்துவர் மட்டுமே இருக்கிறார், அவர் எப்படி அவசர கால சிகிச்சை அளிக்க முடியும் என கஞ்சா கருப்பு கேள்வி எழுப்பினார்.
துணை மேயர் பதில்: இதுகுறித்து புதிய தலைமுறை நியூஸ் சேனலுக்கு துணை மேயர் மகேஷ் அளித்த பேட்டியில், போரூர் அரசு மருத்துவமனை மாநகராட்சிக்குள்பட்டு வராது. எனினும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.
தைப்பூச விடுமுறை: மேலும் இன்று விடுமுறை என்பதால் சுழற்சி அடிப்படையில் மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். அதில் அந்த மருத்துவருக்கு என்ன பிரச்சினை என தெரியவில்லை. இதை விசாரித்துதான் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு திடீரென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். இது போல் டூட்டி நேரத்தில் பணியில் இல்லாதவர்களுக்கு மெமோவும் வழங்கியிருக்கிறார். அந்த மருத்துவமனையிலேயே அவர் அந்த மருத்துவரை தொலைபேசியில் அழைத்து கடிந்து கொண்டிருக்கிறார். மேலும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்திருப்பது தவறு என்ற ஒரு சட்டமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது போல் திடீர் ஆய்வுகள்தான் ஏழை மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வழிவகுக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications