ஒன்றிய அரசை தொடர்ந்து எதிர்க்கும் நடிகர் கார்த்தி.. இந்த முறை எதற்கு தெரியுமா?
சென்னை: மத்திய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021-ஐ கொண்டு வரவுள்ள நிலையில் அதற்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது போல் நடிகர் சூர்யாவும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021 ஆம் ஆண்டு இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்குள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படவுள்ளன.

சென்சார்
இதனையடுத்து ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இது ஜூலை 2 வரை பொதுமக்களின் பார்வைக்காக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என சினிமா துறையை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாதிக்கும்
இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எப்போது வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழை ரத்து செய்யும் அதிகாரம் இந்த சட்ட திருத்தத்தில் உள்ளது. இதனால் வியாபார ரீதியாக ஒவ்வொரு படத்தையும் பாதிக்கக் கூடும்.

பைரசி
அதனால் இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும். அதே நேரத்தில் பைரசியை தடுக்க இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை வரவேற்கத்தக்கவை. இருந்தாலும் ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் விதமாக உள்ளது என கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு
இதே போல் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிகளுக்கு நடிகர் கார்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதில் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தல் என தெரிவித்திருந்தார். இது போல் மக்கள் விரோத திட்டங்களுக்கு நடிகர் கார்த்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications