பாயிண்ட் ஆஃப் ஆர்டரா? அடிதடி? தவெக எம்எல்ஏ அடிக்க பாய்ந்தபோது அமைதியாக பார்த்த உதயநிதி! என்ன நடந்தது
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே நேற்றைய தினம் கடுமையான மோதல், வாக்குவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது.. அவையில் இரு தரப்பினருக்கும் இடையே பாலியல் வன்கொடுமை விவாதத்தின் போது இப்படியொரு காரசாரமான வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.. அவையில் என்னதான் நேற்று நடந்தது?
நேற்றைய தினம் மேகதாது அணைக்கு எதிராக அரசினர் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிய, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற கட்சித் தலைவர்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

சட்டசபையில் வாக்குவாதம்
ஆஹா, சபை ரொம்ப அமைதியாகவும் சுமுகமாகவும் போய்க்கொண்டிருக்கிறது என்று எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருந்த கேப்லதான், அங்கே ஒரு பெரிய பூகம்பமே வெடிக்கத் தொடங்கியுள்ளது.
விளாத்திக்குளம் பாலியல் வன்கொடுமை தொடர்பான விவாதத்தில் திடீரென எண்ட்ரி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, "கொளத்தூரில் எங்கள் தலைவர் 5 நிமிடம் பேசியதற்கே என்ன நடந்தது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியுற்றதை மறைமுகமாக தட்டிவிட, அவ்வளவுதான், திமுகவினர் அனலாகக் கொதிக்கத் தொடங்கிவிட்டனர்.
உடனே திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் வேகமாய் எழுந்து, நாம் இப்போது விவாதிப்பது விளாத்திக்குளம் விவகாரம், இதில் எதற்கு கொளத்தூர் பற்றி இழுக்கிறீர்கள் எனப் பாய்ந்தார்.
அடிக்க பாய்ந்த தவெக எம்எல்ஏ
தன் தலைவரைப் பேசியதால் திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கத்த, இதைப் பார்த்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அப்படியே சீறிப்பாய்ந்து எழுந்து நின்று திமுகவினரை நோக்கி கன்னாபின்னாவென சத்தம் போட தொடங்கினார்கள்.
இதையடுத்து திமுக மற்றும் தவெக இரு தரப்பு எம்.எல்.ஏ-க்களும் சரமாரியாக ஒருவரை ஒருவர் பார்த்து கடுமையான வார்த்தைகளால் மோதிக்கொண்டார்கள். இதனால் மொத்த சபையும் களேபரமாகிப் போனது.
இதற்கிடையே, அவையின் கடைசி வரிசையில் இருந்த சென்னையைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ ஒருவர், அப்படியே ஆக்ரோஷமாக கைகளை ஓங்கிக்கொண்டு திமுகவினரைத் தாக்கப் போவது போல் முன்னேறி வந்தது ஒட்டுமொத்த சட்டமன்றத்தையே அதிர வைத்திருக்கிறது. அதேபோல திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் சீண்ட, அதற்கும் தவெகவினர் அனல் பறக்கும் எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள்..
சபாநாயகர் தலையீடு
ஒருவழியாக சபாநாயகர் தலையிட்டு இரு தரப்பையும் அமைதிப்படுத்தினார். சபை கொஞ்சம் அடங்கினாலும், திமுகவினர் என்ன செய்தாலும் நாங்க அமைதியா இருக்க மாட்டோம், அவங்கள் பாணியிலேயே பதிலடி கொடுப்போம் என தவெக எம்.எல்.ஏ-க்கள் கெத்தாக உரத்த குரலில் எச்சரித்ததால், சலசலப்பு அடங்க நீண்ட நேரம் ஆகியிருக்கிறது.. ஆனால், அவையில் இவ்வளவு களேபரம் நடந்தும் முதலமைச்சர் விஜய் வாய் திறக்காமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாராம்..
இந்நிலையில், News time TN என்ற சேனலில் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், சட்டசபையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பேசியிருக்கிறார்.
அதில், "சட்டமன்றத்தில் ஒரு பெரிய கலவரம் நடப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன. இந்த கலவரம் வரும் என்று தெரிந்தும் தெரியாமலோ முதலமைச்சர் விஜய் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தார். அவருக்கு எதிராக உதயநிதி ஸ்டாலினும் அப்படியே அமர்ந்திருந்தார். இன்று அந்த அளவிற்கு ஒரு பெரிய கலவரம் சட்டமன்றத்தில் வெடித்திருக்கும் சூழ்நிலை நிலவியது.
திமுக - தவெக மோதல்
அந்த பதற்றம் ஏற்படும் போதே, சட்டமன்றத்தை அதுவரை நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த தொலைக்காட்சித் தொகுப்பை உடனடியாக துண்டித்து விட்டார்கள்.
இதற்கெல்லாம் காரணம், கவர்னர் உரையில் எம்.ஜி.ஆரை விட, அண்ணாவை விட பெரிய அளவில் விஜய் வெற்றி பெற்றார் என்று கூறப்பட்டிருந்தது. அதனைச் சுட்டிக்காட்டிய ஆஸ்டின், 'விஜய் எம்.ஜி.ஆர் மாதிரி எல்லாம் வெற்றி பெறவில்லை, அவர் வேறு வழியில்தான் வெற்றி பெற்றார், இந்த ஆட்சியில் பாலியல் வன்முறைகள் அதிகமாக நடக்கின்றன என்று அரசின் குறையைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
அப்போது ஆதவ் அர்ஜுனா எழுந்து, 'ஏன், திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்கள் நடக்கவில்லையா? விளாத்திகுளத்தில் ஒரு குழந்தையை வன்கொடுமை செய்து கொலை செய்யவில்லையா?' என்று கேள்வி எழுப்பினார்.
விளாத்திகுளம் எம்எல்ஏ
உடனே விளாத்திகுளம் எம்.எல்.ஏ எழுந்து, "அன்று இருந்த திமுக அரசு 24 மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு செய்து, அதில் எல்லாவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்தது" என்றார்.
அப்போது இரு தரப்பிலும் கடுமையான வாதங்களும், எதிர்வாதங்களும் ஏற்பட்டு பெரிய அளவில் கலவரம் வெடித்தது. குறிப்பாக இந்த பாலியல் வன்கொடுமை இந்த ஆட்சியில் பெருமளவில் நடக்கிறது என்பது தொடர்பாகவே விவாதம் நீடித்தது.
அப்பொழுது, ராயபுரம் எம்.எல்.ஏ பின்வரிசையில் இருந்து தனது சட்டையை மடித்துக்கொண்டு, இரண்டு வரிசைகளைத் தாண்டி திமுக உறுப்பினர்களை அடிப்பதற்காக ஓடிவந்தார். அதேபோல ரெட்டியார்பட்டி நாராயணன் என்ற எம்.எல்.ஏ-வும் அடிப்பதற்காக ஓடிவந்தார். திமுக தரப்பிலிருந்தும் கடுமையான சத்தங்கள் எழுப்பப்பட்டன. இதனை உதயநிதி ஸ்டாலின் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, அவர் எதையும் தடுக்க முற்படவில்லை.
ராயபுரம் உறுப்பினர்
முதலமைச்சர் விஜயும், ஆட்டோ டிரைவராக இருந்து எம்.எல்.ஏ ஆன ராயபுரம் உறுப்பினர் அடிக்கப் பாய்ந்து ஓடிவந்தபோது அவரைத் தடுக்காமல் அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கு பிறகே சபாநாயகர் தலையிட்டு, முதலில் திமுகவினரையும், அதன்பின் த.வெ.க-வினரையும் சமாதானப்படுத்தி, பெரிய அளவிலான மோதலைத் தடுத்து நிறுத்தினார்.
அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி அவையில் இல்லை. அ.தி.மு.க உறுப்பினர்களும் இந்தத் தகராறுக்குள் வராமல் மிகவும் அமைதியாக இருந்தார்கள். அத்தகைய ஒரு சூழல்தான் அங்கு நிலவியது" என்றெல்லாம் விரிவாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications