சிட்டி வித் கிட்டி.. படுசுட்டித்தனமா பறந்து வந்த ரோபோ.. அர்ஜுன்மூர்த்தி கட்சியின் கலக்கல் புரோகிராம்
சென்னை: அர்ஜுனமூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தனது சின்னமான ரோபோவும் தேர்தல் அறிக்கையும் அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வு லீலா பேலஸில் நடைபெற்றது.
பாஜகவின் அறிவு சார் பிரிவு நிர்வாகியாக இருந்தவர் அர்ஜுனமூர்த்தி. இவர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் என அறிவித்ததால் பாஜகவிலிருந்து விலகினார். ரஜினியின் தொடங்கப்படாத கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்ததால் கடந்த பிப்ரவரி மாதம் அர்ஜுன மூர்த்தி மாற்று அரசியல் என்பதை முன்வைத்து இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்பதை தொடங்கினார். அந்த கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் சின்னம்
இந்த கட்சியின் சின்னம் மற்றும் தேர்தல் அறிக்கையை லீலா பேலஸில் அர்ஜுனமூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது நடிகர் கிட்டி பேசுகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. கனவு மெய்ப்பட வேண்டும் என பாரதி சொல்கிறார். அதுவும் எப்படிப்பட்ட கனவு மிகப்பெரிய ஜனநாயகமான இந்திய நாட்டின் கனவு எப்படி மெய்ப்படும்?

நாயகர்கள்
ஜனங்கள் நாயகர்களாக இருக்க வேண்டும். மக்கள் அரசர்களாக இருக்க வேண்டும். மக்களாட்சி நடக்க வேண்டும். அது நடந்ததா என பார்க்கும் போது கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகமே ஒரு கனவாக போயிற்று. ஜனநாயகம் மறுபடியும் தழைக்க வேண்டும் என்ற மாற்றத்தை நோக்கிதான் இந்த கட்சி தொடங்கப்பட்டது. இது எப்போது நடக்கும், அரசு அமைக்கும் வாய்ப்பு வரும் போது நடக்கும்.

தேர்தல்
அரசு அமைக்கும் வாய்ப்பு எப்போது நடக்கும்? இதற்குதான் ஜனநாயகத்தில் தேர்தல் என்ற கட்டுமானம் இருக்கிறது. தமிழகத்தில் ஜனநாயகத்தை மறுபடியும் புதுப்பிக்க, சீரமைக்க மிகப்பெரிய வாய்ப்பு வந்திருக்கிறது. கட்சியின் கொள்கை சத்தியம், சமத்துவம் , சமர்ப்பணம். சத்தியமாக மக்களுக்காகவே உழைப்போம், அனைவரும் சமம், சேவைக்காக சமர்ப்பிப்போம் என்றார். இதையடுத்து ரோபோ சின்னம் ஆக்மென்டட் ரியாலிட்டி (சில விசேஷ கருவிகள் மூலம் ஒரு பொருளுக்கு உயிரூட்டுவது) எனும் தொழில்நுட்பம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பேசிய ரோபோ
அந்த ரோபோ மேடைக்கு வந்தது. அப்போது ரோபோ பேசுகையில், நான்தான் சிட்டி ரோபோ. நான் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் சின்னம். எங்கள் கட்சியின் கொள்கை மத ஒற்றுமை, ஜாதி ஒற்றுமை, மொழி ஒற்றுமை. பாருங்கள் நாம் வேற லெவலில் வளருவோம் என சொல்லிவிட்டு ரோபோ சிட்டாட்டம் பறந்துவிட்டது.

சுயேச்சை வேட்பாளர்
நடிகர் கிட்டி கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தேர்தலில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் கிட்டி போட்டியிடுவார் என தெரிகிறது. 2016லேயே மாற்று அரசியல் , நேர்மையான அரசியல் என பிரச்சாரம் செய்தவர் கிட்டி.












Click it and Unblock the Notifications