கொக்கைன் பயன்படுத்தியதற்கு ஆதாரமே இல்லை! என்னை தவறாக கைது பண்ணிட்டாங்க! நடிகர் கிருஷ்ணா ஜாமீன் மனு
சென்னை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தன்னை போலீஸார் தவறுதலாக கைது செய்துள்ளனர் என மனுவில் கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஜாமீன் மனுவில் கிருஷ்ணா கூறியிருப்பதாவது: எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை போலீஸார் தவறுதலாக கைது செய்தனர். நான் போதை பொருள் பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
வழக்கில் தொடர்புடைய எந்த போதைப் பொருட்களும் என்னிடம் இல்லை. போலீஸாரும் என்னிடமிருந்து எதையும் கைப்பற்றவில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த், கெவின் உள்ளிட்ட நபர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த வழக்கு உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்த வாட்ஸ் ஆப் குரூப்பிலும் நான் இல்லை. பழைய வாட்ஸ் ஆப் குரூப்பை வைத்து போலீஸார் என்னை கைது செய்துள்ளனர். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணாவின் ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் இருவர் பீர் பாட்டிலால் அடித்துக் கொண்ட சம்பவத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவருடைய செல்போனை ஆய்வு செய்த போலீஸாருக்கு அதிர்ச்சி! அதில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதை பொருள் சப்ளை செய்ததற்கான வாட்ஸ் ஆப் சாட்கள் இருந்தன. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது பிரதாப் என்பவரிடம் இருந்து கொக்கைன் எனும் போதை பொருளை ஸ்ரீகாந்துக்கு வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்தார்.
மேலும் பிரசாத் ஒரு தயாரிப்பாளர், ஸ்ரீகாந்த் நடித்த "தீங்கிரை" என்ற படத்தை தயாரித்தாராம். அந்த வகையில் பிரசாத்துக்கு ஸ்ரீகாந்தை தெரிந்திருந்தது. இதையடுத்து ஸ்ரீகாந்திடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போதை பொருளை தான் பயன்படுத்தவில்லை என தெரிவித்தாராம்.
இதையடுத்து அவரது ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் அவர் கொக்கைனை உட்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்து அவரை புழல் சிறையில் வரும் ஜூலை 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளார்கள். இவர் ஜாமீன் கோரி போதை பொருள் தடுப்பு பிரிவில் விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் கழுகு பட நடிகர் கிருஷ்ணாவும் போதை பொருளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர் ஆதாயம் இல்லாமல் நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் சிலருக்கு போதைப் பொருளை கைமாற்றியதாகவும் தகவல்கள் வெளியானது.
அவருடைய ரத்த மாதிரிகளை சோதனை செய்த போது அவர் போதை பொருளை பயன்படுத்தவில்லை என தெரிகிறது. ஆயினும் இவர் வாட்ஸ் ஆப் குழுக்களில் கோட் வேர்டு மூலம் பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய உடல் போதை பொருளை உட்கொள்ளும் அளவுக்கு சக்தியில்லை என்பதற்கான மருத்துவ சான்றுகளையும் போலீஸில் கிருஷ்ணா ஒப்படைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications