Mano bala அவ்ளோ சீக்கிரம் கோபம் வராது! ஒரு வேளை வந்துச்சுன்னா! மனோ பாலா நேரா எங்க போவார் தெரியுமா?
சென்னை: மனோபாலாவுக்கு கோபம் வந்துச்சுன்னா என்ன செய்வார் தெரியும்.. கிச்சன் குள்ள போய் தடபுடலாக சமைக்கத் தொடங்கிவிடுவாராம்.
மனோபாலா என்ற பெயரை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் திறமை. தான் இயக்கிய அத்தனை படங்களிலும் மென்மையாகவே இருக்கும். நிறைய வன்முறை காட்சிகளை படமாக்க மாட்டார். இவர் ஒரு ஓவியரும் கூட!

தன்னுடன் பணியாற்றிய அத்தனை உதவி இயக்குநர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வார். இவர் கடந்த சில தினங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார். இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அவருடன் பயணித்தவர்கள் அவருடைய நினைவலைகளை பகிர்ந்து வருகிறார்கள். மனோபாலா நடிப்பதில், படங்களை இயக்குவதில், தயாரிப்பதில், ஓவியம் வரைவதில் மட்டும் கெட்டிக்காரர் அல்ல. அவர் நன்றாக சமைப்பார். அவர் சமைத்து அனைவருக்கும் கொடுப்பார். அதில் அவருக்கு ஒரு இன்பம்.
அவர் சமையலுக்கு பல திரைப்பிரபலங்கள் ரசிகர்களாக உள்ளனராம். ஒரு மணி நேரத்தில் அவர் சோறு, குழம்பு, சாம்பார், ரசம், 2 பொரியல் என செய்து பரிமாறுவாராம். அவர் சமைக்கும் சமையலின் ருசியையும் வேகத்தையும் பெண்களால் கூட செய்ய முடியாது என்கிறார்கள். மனோபாலா குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் 14 ஆவது எபிசோடில் அவர் எலிமினேட் ஆகிவிட்டார்.

ஆனால் அவர் குக் வித் கோமாளி செட்டில் இருந்தவரை செட்டை கலகலப்பாக வைத்துக் கொண்டார். மேலும் தன்னுடன் இருந்த கோமாளிகளுடன் காமெடி செய்தார். அவர்கள் கிண்டல் செய்தாலும் சிரித்துக் கொண்டே அவர்களின் நகைச்சுவை உணர்வை ரசித்தார். பெரும்பாலும் டென்ஷனே ஆகாமல் சிரித்துக் கொண்டே இருந்த மனோ பாலா டென்ஷனை குறைக்க கைவசம் ஒரு ஐடியா வைத்திருப்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் 2017ஆம் ஆண்டு ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் எனக்கு டென்ஷன் ஏற்பட்டால் அதை குறைக்க கைவசம் ஒரு மேட்டர் இருக்கு. நேரா சமையல் கட்டுல புகுந்து சமைக்க ஆரம்பிச்சிடுவேன். சமையல் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். என்னுடைய சமையல் பிடிச்ச என் நண்பர்களுக்கும் சமையல் செய்து கொடுப்பேன்.

லிவிங்ஸ்டன், ஊர்வசிக்கு நான் வைக்கும் வத்தக்குழம்பு அப்பளம் என்றால் மிகவும் பிடிக்கும். காலையில் 6 மணிக்கு ஹாட்பேக்குல எடுத்துக்கிட்டு போய் கொடுப்பேன். மதியானம் அவங்க அதை சாப்பிடும் போது என் மனசுக்குள் ஒரு சந்தோஷம் எட்டிப்பார்க்கும். அதுக்கு விலையே இல்லை என குறிப்பிட்டிருந்தார். சாலிகிராமம் அலுவலகத்தில் மொட்டை மாடியில் தோட்டம் போட்டிருக்கிறார் மனோ பாலா. அதில் காய்க்கும் காய்கறிகள் மூலமும் அவர் சமையல் செய்து கொண்டு வருவாராம். இரங்கல் தெரிவிக்க வருவோர் அவருடைய சமையலையும் அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற அவருடைய மனதையும் பாராட்டி கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications