“மனசு நொந்து போச்சு..!” நடிகை த்ரிஷாவுக்கு சப்போர்ட்டாக வந்த நடிகர் மன்சூர் அலிகான்! என்ன சொன்னார்
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து அவதூறு கருத்துக்களுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானும், த்ரிஷா குறித்த அவதூறு கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பிரமுகர் ஒருவர் சமீபத்தில் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார். அதில் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில் பல்வேறு தரப்பினரும் அதிமுக பிரமுகர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக த்ரிஷா தனது x பதிவில், "கவனம் பெற எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும் கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது. இது தொடர்பாக தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும். இனிமேல் சட்டரீதியாகத்தான் எல்லாவற்றையும் சொல்லபோகிறேன்" என்று எச்சரித்திருந்தார்.
விஷயம் சீரியஸான நிலையில், தனது பேச்சுக்கு அதிமுக பிரமுகர் மன்னிப்பு கோரினார். தான் த்ரிஷாவை குறிப்பிடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், த்ரிஷா குறித்த அவதூறு பேச்சுக்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அதாவது, "திரைத்துறை சகோதரிகளை அரசியல் போர்வையில் விமர்சித்திருப்பது மனதை நோக செய்கிறது. நடிகைகள் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும். போகிற போக்கில் நடிகைகளை கீழ்த்தரமாக விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே த்ரிஷா விஷயத்தில் மன்சூர் அலிகான் நீதிமன்றம் சென்று வந்திருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான வீடியோ ஒன்றில் த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் தரக்குறைவாக பேசியிருந்தார். இதனையடுத்து அவர் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என அதன் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தொடர் புகார்களையடுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியதையடுத்து பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இப்படி இருக்கையில், த்ரிஷாவுக்கு சப்போர்ட்டாக மன்சூர் அலிகான் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.












Click it and Unblock the Notifications