யார் இதெல்லாம் செஞ்சாங்க! எங்களுக்கு செலவே வைக்கல! செலவு பில்லோட ஒருத்தரும் வரலையே.. மயில்சாமி மகன்
சாமியானா, பந்தல், உணவு செலவுக்கு காசு செட்டில் செய்ய காத்திருக்கும் மயில்சாமி மகன்கள். ஆனால் வாங்கத்தான் யாரும் வரவில்லை.
சென்னை: சாமியானா பந்தல், உணவு, டீ, காபி செலவுத் தொகையை கொடுக்க பணத்துடன் நாங்கள் காத்து கிடக்கிறோம், ஆனால் யாரும் வந்து எங்களிடம் பணம் கேட்கவே இல்லை. எல்லாமே அதிசயமாக இருக்கிறது என நடிகர் மயில்சாமியின் மகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் மயில்சாமிக்கு ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் சர்ஜரி நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து கார்த்திகை தீபத்தன்று அவருக்கு ஒரு மைல்ட் அட்டாக் வந்துள்ளது.
அத்துடன் கடந்த சிவராத்திரி அன்றுதான் அவருக்கு மூன்றாவது அட்டாக் வந்துள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது. மயில்சாமி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடல் வடபழனியில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

மயில்சாமி
மயில்சாமி இறந்த தினத்திற்கு முந்தைய நாள் முதல் நடந்தது என்ன என்பதை அவருடைய மகன்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கியுள்ளனர். மயில்சாமிக்கு வீட்டில் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதும் அவருடைய மகன் காரில் மருத்துவமனைக்கு முன் சீட்டில் உட்கார வைத்து அழைத்து சென்றார்.

பாதி வழியில்
பாதி வழியில் திடீரென தனது மகன் மீது மயில்சாமி சாய்ந்துவிட்டார். இதையடுத்து அப்பாவையும் பிடித்துக் கொண்டு தன்னால் காரை இயக்க முடியவில்லை என்பதால் அந்த பகுதியில் ஆட்டோவை பிடித்துக் கொண்டு ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் இறந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனாலும் அப்பா மயக்கத்தில்தான் இருப்பார் என கருதி அங்கிருந்து போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.

மருத்துவர்கள் பரிசோதனை
அங்கு பரிசோதித்த மருத்துவர்களும் மயில்சாமி இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்துதான் அவரது உடலை வீட்டிற்கு அழைத்து வந்தனர். தனது அப்பா கடைசியாக நவம்பர் மாதம் இரண்டாவது அட்டாக் வந்த போதிலிருந்தே மதுவை தொடவில்லை. எனவே அப்பா குடிப்பழக்கத்தால்தான் இறந்தார் என்று சொல்வதை நிறுத்துங்கள் என மகன்கள் தெரிவித்தனர்.

கடைகள் மூடல்
அது போல் அப்பா இறந்தவுடன் சாலிகிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுவிட்டன. ஏனென்றால் எங்கள் அப்பா ஷூட்டிங் போக வீட்டில் இருந்த நேரத்தை விட சாலிகிராமத்தில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் என்ன பிரச்சினை என பார்த்து பார்த்து அதை அதிகாரிகளை வைத்து சரி செய்வார், எல்லா கடைகளுக்கும் செல்வார். எல்லாருடனும் நன்றாக பழகுவார். எனவேதான் அந்த கடைக்காரர்களே இரு நாட்களாக தங்கள் கடைகளை மூடிவிட்டு பிழைப்பை விட்டுவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் என்றனர்.

சாமியானா பந்தல்
அது போல் இளைய மகன் யுவன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால் அதன் பிறகு சாமியானா பந்தல், நாற்காலிகள், வந்தவர்களுக்கு உணவு, டீ, காபி உள்ளிட்டவைக்கான செலவுகள் இருக்கும். ஆனால் வந்தவர்களை நாங்கள் சாப்பிட்டீர்களா என கூட கேட்கவில்லை. ஆனால் அப்பா இறப்புக்கு வந்தவர்களுக்கு சரியான நேரத்திற்கு உணவு போயிருக்கிறது, பத்திரிகை, போலீஸ் துறையினருக்கும் உணவும், டீ, காபியும் போயிருக்கிறது.

செலவு பில்
இதுவரை இதற்கான செலவு பில்லுடன் யாரும் வந்து எங்களிடம் பணம் கேட்கவில்லை. இவற்றையெல்லாம் யார் செய்தார்கள் என்றே தெரியவில்லை என்றார் மகன் யுவன். மயில்சாமி தனது குடும்பத்தினருக்கு பணம் காசு சேர்த்து வைத்தாரோ இல்லையோ நல்ல மனிதர் என்ற பெயரையும் நல்ல மக்களையும் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். 57 ஆண்டுகள் மயில்சாமி எப்படிப்பட்டவர் என்பது கடந்த 19, 20 தேதிகளில் தெரிந்துவிட்டது.












Click it and Unblock the Notifications