நல்லது நடக்கும் அன்றே கெட்டதும் நடக்கும்... மோடி பெரியார் பிறப்பு... ராதா ரவி விமர்சனம்!!
சென்னை: நல்லது நடக்கும் அன்றே ஒரு கெட்டதும் நடக்கும் என்று பிரதமர் மோடி பிறந்த நாளில் பெரியாரும் பிறந்து இருப்பதை நடிகர் ராதாரவி விமர்சனம் செய்துள்ளார். மேலும், நடிகர் சூர்யா எதைப் பேசினாலும் தெரியாமல் பேசுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் சேர்ந்து இருக்கும் நடிகர் ராதா ரவி இன்று சென்னையில் அளித்த பேட்டியில், ''வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர். திமுக ஒரு காலத்தில் வெற்றி பெற்று இருப்பதற்கும் ரஜினிதான் காரணம்.

தயாநிதி மாறனுக்கு இந்தி தெரியும் என்பதால், அவரை எம்பி ஆக்கினேன் என்று கருணாநிதியே கூறி இருக்கிறார். பாஜகவில் நடிகர் விஷால் இணைந்தால் நல்லது. நான் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருக்கிறேன்.
நடிகர் சூர்யா எதைப் பேசினாலும் தெரியாமல் பேசுகிறார். அம்பேத்கருக்கு லண்டனில் பாஜகவினர் வீடு கட்டியுள்ளனர். எனவே, பாஜகவைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு மட்டும்தான் தகுதி உள்ளது. நடிகர் சங்கம் கட்டுவதற்கு இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இன்னும் திறக்கப்படவில்லை. நடிகர் சங்கம் உருப்படாது'' என்றார்.
''தற்போதெல்லாம் சீதையாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும், நயன்தாராவைப் பற்றி வராத செய்திகளே கிடையாது. மக்கள் அதை எளிதில் மறந்து விடுகின்றனர்'' என்று முன்பு நடிகர் ராதாரவி பேசி இருந்தார். இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு இருந்தார்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்து, அங்கிருந்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் தனது விமர்சனங்களை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications