விஜிம்மாவுக்கு இப்படி ஒரு நிலைமையா! இப்போ மட்டும் பழையபடி இருந்தா.. கண்ணீர் விட்ட நடிகர் ராதா ரவி
சென்னை: திரையுலகில் கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை காலமானார். இந்நிலையில் அவர் குறித்த நினைவலைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக விஜயகாந்த்துக்கும், நடிகர் ராதா ரவிக்கும் இடையேயான நட்பு குறித்து பலரும் சிலாகித்துள்ளனர்.
விஜயகாந்த் தமிழக மக்களுக்கு முழுவதுமாக பரிட்சியமானது சினிமா மூலம்தான். பொதுவாக சினிமா துறைக்கு என பல எழுதப்படாத நடைமுறைகள் உள்ளன. அதில் முக்கியமானது பழக்க வழக்கங்கள். சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் அவ்வளவு எளிதில் சாதாரண கதாபாத்திரத்தில் நடிப்பவர்களிடம் பழகிவிடமாட்டார்கள். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், விதி விலக்காக மிக எளிமையாக பழகும் நபர்களை தமிழ் சினிமா துறை கொடுத்திருக்கிறது. அதில் முக்கியமானவர்தான் விஜயகாந்த்.

மூத்த திரை கலைஞர் ராதா ரவி விஜயகாந்த் குறித்து பேசுகையில் "என்னுடைய வாழ்க்கை வரலாறு எழுதும்போது அதில் விஜயகாந்த் குறித்து நிச்சயமாக ஒரு பகுதி இருக்கும்" என்று சிலாகித்து கூறியிருக்கிறார். திரைத்துறையில் இவர்கள் கோலோச்சி இருந்தபோது 5 பேர் கொண்ட குழுவாகத்தான் இருப்பார்கள். எங்கே சென்றாலும், இவர்கள் ஐவரும் சேர்ந்துதான் செல்வார்கள். அதேபோல பொதுவெளியில் எவ்வித அநாகரீக செயல்களிலும் ஈடுபடமாட்டார்கள். இந்த கேங்-க்கு விஜயகாந்த்தான் தலைவராக இருந்திருக்கிறார்.
இது குறித்து ராதாரவி கூறுகையில், "எங்களுக்கு குடி பழக்கம் இருந்தது. ஆனால் நாங்கள் யாரும் பாரிலோ, பப்பிலோ அநாகரீகத்தில் ஈடுபடமாட்டோம். குறிப்பாக விஜிம்மா இந்த விஷயத்தில் மிகுந்த கராறாக இருப்பார். அதேபோல, அவர் யாரிடமும் பாகுபாடு காட்டியது கிடையாது. விஜிம்மா நான் பல படங்களில் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். எங்களுக்கு இரு வேறு அறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் நாங்கள் இருவரும் ஒரே அறையில்தான் தங்கியிருப்போம்.
தான் ஒரு ஹீரோ என்கிற அதீதமான தன்னுனர்வை அவரிடம் நான் பார்த்ததே கிடையாது. சிவாஜி இறந்தபோது விஜிம்மா வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி கூட்டத்தை ஒழுங்குபடுத்தியதை எல்லாம் என்னால் மறக்கவே முடியாது. அவ்வளவு கூட்டத்தை கட்டுப்படுத்த நிச்சயம் ஒரு ஆளுமை கொண்டவரால்தான் முடியும். அது விஜிம்மாவால் முடிந்தது. அப்படி இருந்த மனுஷனை இப்படி என்னால் பார்க்கவே முடியவில்லை.
'தீர்ப்பு என் கையில்' திரைப்படத்தில்தான் எனக்கும் விஜயகாந்த்துக்கும் நட்பு ஏற்பட்டது. அப்போது எப்படி பழகினாரோ அதேபோலதான் கடைசி வரையிலும் என்னுடன் பழகினார். சினிமாவையும் கடந்து அவருடைய உடலை பாதுகாப்பதற்கு தீவிரமான மெனகெட்டார். அதிகாலையில் ரன்னிங் போகும் பழக்கத்தை திரை துறையிலிருந்து விலகிய பின்னரும் கூட அவர் பின்பற்றி வந்தார். சினமாவுக்காக உடல் என்பதை கடந்து, நலனுக்காதான் உடல் என்று அவர் இருந்தார்.
அப்படி ஒரு ஆளுக்கு இதுபோன்று ஒரு பிரச்னை வரும் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவேயில்லை. அவருடைய கடைசி காலத்தில், அவரை நேரில் சென்று பார்க்கும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. இப்போ மட்டும் அவர் பழைய மாதிரி இருந்திருந்தா இந்நேரம் முதலமைச்சராக இருந்திருப்பார்" என்று கூறி தனக்கும் விஜயகாந்த்துக்குமான நட்பு குறித்து பல இடங்களில் ராதா ரவி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications