தமிழக அரசியலுக்கு நாம லாயக்கே இல்லை... இது புரிய ரஜினிக்கு ஆச்சு 25 ஆண்டுகள்!
சென்னை: தமிழ் மண்ணின் அரசியலுக்கு தாம் தகுதியானவரும் இல்லை. இந்த மண்ணின் அரசியலுக்கு தாம் சரிப்படவும் மாட்டோம் என்பதை ஓரளவேனும் நடிகர் ரஜினிகாந்த் உணர்ந்தும் புரிந்தும் கொள்ள சுமார் 25 ஆண்டுகளாகி இருக்கிறது.
Recommended Video
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்பது 30 ஆண்டுகளுக்கு முன்னரே வார இதழ்களின் அட்டைப்பட கட்டுரைகளாக வந்த செய்திகள்.. அதுவும் 1996-ல் இருந்து ரஜினிகாந்த் என்கிற நடிகரை மையமாக வைத்து எத்தனை எத்தனை அரசியல் சதுரங்கங்கள்..விளையாட்டுகள்
ஆர்.எம். வீரப்பனுடன் இணைந்து தனிக்கட்சி தொடங்குகிறார் ரஜினிகாந்த் என்பதில் தொடங்கி 2017-ல் தாம் சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சியை தொடங்கி போட்டியிடப் போவதாக ரஜினிகாந்த் அறிவிக்கும் வரைதான் எத்தனை எத்தனை செய்திகள். இத்தனை செய்திகளும் யூகங்களாகவே இருந்தன. ஆனால் இத்தனை ஆண்டுகாலம் இதுபற்றி ஒரு முறையேனும் வாயை திறக்காதவர் ரஜினிகாந்த்.
வாய்மூடி மவுனியாக ரஜினி
ரஜினிகாந்த் வாய்மூடி கிடந்ததற்கு சில காரணங்கள் இருக்கலாம்.. ஊடக வெளிச்சத்திலேயே மிதந்து கொண்டிருந்தால் தமது படங்கள் ஓடிக் கொண்டே இருக்கும் என்கிற பக்கா கல்லாபெட்டி சுயநலம்.. இன்னொன்று அரசியல் ஆளுமைகள் என்று அடிக்கடி ரஜினிகாந்த் வியந்து சொல்லும் கருணாநிதி, ஜெயலலிதாவை கண்டு பதுங்கிக் கொண்ட உச்சகட்ட கோழைத்தனம் அதேநேரத்தில் ஏ..நான் கோழை இல்லை.. கோழை இல்லை என்று நடிப்பதற்காக கருணாநிதி, மூப்பனார் பின்னர் ஜெயலலிதாவுடன் சமரசமாகிக் கொண்ட பச்சோந்தி தனம் ஆகியவற்றைச் சொல்லலாம்
முதல்வர் ஆசை
இப்படியே காலத்தைக் கடத்திவிடலாம் என நினைத்தவருக்கு கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியலில் குதிச்சு முதல்வராகிவிடலாம் என்கிற ஆகப் பெரும் நப்பாசை இருந்திருக்கலாம். இந்த நப்பாசையை தூண்டிவிட்டு குளிர்காய்ந்திருப்பவர்கள் ஏராளமாக இருக்கலாம். இதனை நம்பித்தான் ரஜினிகாந்த் உதிர்த்த முத்துகள் தமிழகத்தின் முட்டு சந்துகளில் எல்லாம் சாணி அடி வாங்கின.
சரிப்பட்டு வராது!
இவ்வளவு அடிக்குப் பின்னரும் அரசியல் கட்சி தொடங்கத்தான் வேண்டுமா? என ரஜினிகாந்த் என்கிற குதிரை பின்னே போக நினைத்த போது டெல்லி என்கிற எஜமானர் கொடுத்த நெருக்கடியில் எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்கிற நிலைக்குப் போயிருக்கிறார் ரஜினிகாந்த். தமிழக அரசியல் களம் என்பது தாம் நினைத்தது போல அவ்வளவு எளிதானது அல்ல.. தாம் கால் வைத்தால் மூட்டை பூச்சி போல் நசுக்கிவிடுவார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டுவிட்டார்.
தலைதெறிக்க ஓடும் ரஜினி
ஆனால் தாம் புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டதை வெளியே பகிரங்கமாக சொன்னால் இத்தனை காலம் போலித்தனமாக கட்டிக் காப்பாத்தின இமேஜ் கறைபடிந்துவிடும் என்பதுதான் தயக்கம்.. இதனால்தான் நான் அரசியலுக்கு வரவே இல்லை; இந்த தமிழக அரசியல் எனக்கு சரிப்படாது.. எழுச்சி, புரட்சி எல்லாம் வந்த பிறகு வருகிறேன் என ஜகா வாங்கி ஓடிவிட்டார் ரஜினிகாந்த். இந்த மண்ணின் அரசியலை புரிந்து கொண்டு தலைதெறிக்க ஓடி பதுங்க ரஜினிகாந்த் என்ற நடிகருக்கு 25 ஆண்டுகள் தேவைப்பட்டிருப்பது சரித்திரத்தின் விசித்திரம்!