'பேட்ட' படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக்குகளை தெறிக்க விட்ட ரஜினிகாந்த்.. ரசிகர்கள் குஷி!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆன திரைப்படம் 'பேட்ட'.
இதற்கு முன்பாக, ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வெளியான 2.O திரைப்படம் ஃபேன்டஸி பட வகையறா என்பதால், அதில் அரசியல் பேசப்படவில்லை. ஆனால், முந்தைய படங்கள் காலா மற்றும் கபாலி முழுக்க அரசியல் பேசிய படங்கள்.
இருப்பினும் அது இயக்குநர் ரஞ்சித்தின் அரசியலை முன்னெடுத்து சென்றனவே தவிர, ரஜினிகாந்த்தின் கொள்கைகளை கிடையாது.

பழைய ஸ்டைல்
இந்த நிலையில்தான், பேட்ட திரைப்படம் முழுக்க ரஜினிகாந்த்துக்கான, படமாக வெளியாகியுள்ளது. இதில், ரஜினிகாந்த் அண்ணாமலை, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, பாபா போன்ற படங்கள் போல ரஜினிகாந்த்துக்கான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. நாம் குறிப்பிட்ட முந்தைய படங்களில், ரஜினிகாந்த்துக்காக எந்த மாதிரி அரசியல் வசனங்கள் இருந்தன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

பஞ்ச் டயலாக்குகள்
இந்த நிலையில்தான், நீண்ட காலத்திற்கு பிறகு, ரஜினி தனக்கான அரசியல் பஞ்ச் டயலாக்குகளை பேட்ட திரைப்படத்தில் பேசியுள்ளார். இதனால் ரசிகர்கள் ஏகத்துக்கும் மகிழ்ச்சியில் உள்ளனர். தனது அரசியலுக்கான பஞ்ச்கள் அவை. இடைவேளைக்கு முந்தைய அல்லது பிந்தைய காட்சி என்று பாகுபாடு இல்லாமல், சரிசமமாக பஞ்ச் டயலாக்குகள் படமெங்கும் தூவப்பட்டுள்ளன.

புதிதாக வந்தால் மிரட்டுவதா
ஹாஸ்டல் வார்டனாக பணியில் உள்ள ரஜினிகாந்த், ரேகிங் செய்யும் சீனியர் மாணவர் குழுவை தட்டிக்கேட்கிறார். அப்போது அவர் பேசும் ஒரு பஞ்ச் முக்கியமானது. "புதிதாக வருவோரை மிரட்டி விரட்டும் அரசியல் இங்கே இருந்துதான் தொடங்குகிறதா? இந்த பூமி யார் வீட்டு அப்பன் சொத்தும் கிடையாது. எல்லோருக்கும் இங்கே உரிமை இருக்கிறது" என்கிறார் ரஜினிகாந்த். அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவதாக அறிவித்த பிறகு அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் கிளம்பும் சூழ்நிலையுடன் இந்த பஞ்ச் டயலாக்கை ரசிகர்களால் பொருத்தி பார்க்க முடிகிறது.

உடனே இறங்கனும்
இதேபோல, ஹாஸ்டல் உணவு மோசமாக இருப்பதை சுட்டிக்காட்டும் ரஜினிகாந்த், சாப்பாடு என்பது அடிப்படையானது. அதையே சரியாக தராமல் இருக்கும்போது தட்டிக் கேட்க வேண்டும் என்கிறார். க்ளைமேக்ஸ் நெருங்கும்போது, ஒரு முக்கியமான காட்சியில், நாம ஏற்கனவே 20 வருஷம் லேட். இறங்கனும்னு முடிவு பண்ணிட்டா உடனே இறங்கிடனும். லேட் பண்ணக்கூடாது என்கிறார் ரஜினிகாந்த். இதுவும் அவர் அரசியல் வருகைக்கான பஞ்ச்சாக பார்க்கப்படுகிறது.

பாயுற நேரம்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.., பாக்தத்தான போற, இந்த காளியோட ஆட்டத்த.., நிறைய யோசிக்க கூடாது, பட்டுன்னு யோசிச்சி, பொட்டுன்னு போடனும், நாம பயந்து ஒதுங்கல, பாயுறதுக்கு நேரம் பார்த்து இருந்தோம், இதுதான் நேரம், இந்த பேட்ட பாயுற நேரம்.. இப்படியான டயலாக்குகளும் ரஜினிகாந்த் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே அழைத்துச் செல்கிறது.

வருங்காலம்
அதேநேரம், இவையெல்லாம் அவர் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினாலும், ஏற்கனவே குறிப்பிட்டபடி, அரசியல் பஞ்ச்களை அவர் அண்ணாமலை காலத்தில் இருந்தே சொல்லித்தானே வருகிறார். ரஜினியின் பழைய 'மாஸ் எலிமென்ட்ஸ்' பேட்ட படத்தில் திரும்ப கொண்டுவரப்பட்டுள்ளதைபோலத்தான், பழைய பஞ்ச்களும் கொண்டுவரப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள் விமர்சகர்கள். இதுவும் வழக்கமான பஞ்ச் டயலாக்காக கடந்து செல்லுமா, அல்லது, அவர் அரசியலுக்கான கட்டியம் கூறுமா என்பதை வரும் நாட்கள் முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications