தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசுக்கு நன்றி.. நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை!
சென்னை: மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசுக்கு நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு மூலம் தாதா சாகேப் விருது வழங்கப்பட்டு வருகிறது. சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிகப்பெரிய விருது ஆகும் இது .
இந்த நிலையில் இந்த வருடம் 51-வது தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்,
ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் சாதனையை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தனக்கு தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் திரையுலகின் மிக உயரிய தாதா சாஹேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசிற்கும் , மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிப்பு திறமை
என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும் , வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் திரு.சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு K.பாலச்சந்தர் அவர்களுக்கும் நன்றி.
இயக்குனர்
அதேபோல் திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் , விநியோகஸ்தர்கள் , திரை அரங்க உரிமையாளர்கள் , ஊடகங்கள் , மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் , உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.
அரசியல் தலைவர்களுக்கு நன்றி
என்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் , மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களுக்கும் , மதிப்பிற்குரிய எதிர் கட்சித் தலைவர் நண்பர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் , நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கும் , மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும் , திரையுலக நண்பர்களுக்கும் , என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.