திடீரென இமயமலை புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்.. 4 ஆண்டு கேப்! ஜெயிலர் ரிலீசாகும் நேரம் - சொன்னது என்ன?
சென்னை: ரஜினிகாந்த் நடித்து உள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று அவர் இமயமலைக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார்.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன், சுனில், ரெட்டின் கிங்ஸ்லி, சரவணன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது.

அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து உள்ளார். அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து உள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள இப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், வினாயகன் என பல மொழி நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
நாளை படம் வெளியாக உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இமய மலையில் தியானம் செய்வதற்காக புறப்பட்டு சென்று இருக்கிறார். வீட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு காரில் புறப்படும் முன்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு செல்கிறேன்.

ஜெயிலர் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள்." என்று தெரிவித்தார். பாபாவின் பக்தரான நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி தியானம் செய்வதற்காக இமயமலைக்கு செல்வது வழக்கம். குறிப்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அவர் இமய மலைக்கு பயணிப்பது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று, ரஜினியின் அரசியல் பிரவேசம் மற்றும் அவரது உடல் நிலை பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் நீண்ட பயணங்களை தவிர்த்து வந்த அவர் தற்போது 4 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் இமயமலைக்கு புறப்பட்டு சென்று உள்ளார்.












Click it and Unblock the Notifications