வந்துட்டேனு சொல்லு..திரும்ப வந்துட்டேனு! அப்பல்லோவில் இருந்து வீடு திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினி
சென்னை : கடந்த 30 ஆம் தேதி முதல் உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறிது ஓய்வுக்கு பிறகு மீண்டும் அவர் கூலி படத்தின் சூட்டிங்கில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.
ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் சூப்பர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து வேட்டையன் படம் வரும் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்காக பல்வேறு நகரங்களுக்கும் அவர் தொடர் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்னும் சில நாட்களில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து ரஜினியின் இதயத்திலிருந்து பிரிந்து செல்லும் பிரதான ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாகவும் அதனை கண்டறிந்து ஸ்டண்டு வைத்து சரி செய்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. தொடர்ந்து ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அச்சப்படும் வகையில் இல்லை, பெரிய அளவிலான அறுவை சிகிச்சையும் செய்யவில்லை.. வெறும் பரிசோதனைக்காக சென்றுள்ளார் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது போன்ற இரு வேறு தகவல்களால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகமே இது தொடர்பாக விளக்கம் அளித்தது. அதில்," ரஜினிகாந்த் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மூத்த இருதயநோய் நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ், பெருநாடியில் ஒரு ஸ்டென்டை வைத்து வீக்கத்தை (எண்டோவாஸ்குலர் ரிப்பேர்) முழுவதுமாக அடைத்தார், . திட்டமிட்டபடி இந்த நடைமுறை நடந்தது என்பதை அவரது நலம் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். ரஜினிகாந்த் நிலையாக இருக்கிறார், உடல்நிலையும் நன்றாக இருக்கிறது. இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார்" என கூறப்பட்டது. இதன் காரணமாக அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம். பாஜக தலைவர் அண்ணாமலை, சசிகலா உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் சரி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்ததும் மருத்துவர்கள் கண்காணிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இருந்தார். இந்த நிலையில் சுமார் மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இன்று அதிகாலையில் ரஜினிகாந்த் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் வீடு திரும்புகிறார் என்ற தகவல் பகலில் வெளிவந்தால் அதிக அளவில் ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால் அதிகாலையிலேயே அவர் போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் ஓய்வு எடுக்க வேண்டிய சூழலில் ரசிகர்கள் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிறிது நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அவர் மீண்டும் கூலி படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications