கொதிச்சுட்டாரே ராஜ்கிரண்.. கழிசடைகள் முஸ்லிம்கள் பற்றி பேசினால் விளைவு மோசமா இருக்குமாம்! என்னாச்சு?
சென்னை: இஸ்லாமியர்களின் பொறுமையை தவறாக புரிந்துகொண்டு கண்ட கழிசடைகளும் பேசத் தொடங்கினால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என நடிகர் ராஜ்கிரண் எச்சரித்து உள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரண், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சமய நல்லிணக்கம் சார்ந்த கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில், "இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்து கொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ, அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல.
"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்", பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம். இந்தப்பொறுமையை, தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில் ராஜ்கிரணின் இந்த கருத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சை கண்டித்தே ராஜ்கிரன் பேசி இருப்பதாக பலரும் கருத்திட்டு வருகிறார்கள். மணிப்பூரில் குகி பழங்குடியின மக்களுக்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால், சாத்தானின் குழந்தைகளாக அவை மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து விட்டனர்.
இந்த நாட்டில் நடக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியதே இஸ்லாமியர்களும், கிறிஸ்துவ மக்களும்தான். திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் 18 விழுக்காடு வாக்குகளை போட்டு போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள்தான்." என்று கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும் சீமானின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான,அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
முன்பு தாய் மதத்திற்கு திரும்புங்கள் என சங்கப்பரிவார் தொண்டர் போல் பேசியவர் சீமான். தற்போதைய அவரது சிறுபான்மை வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். இத்தகைய வேடதாரிகளிடம் தமிழக மக்கள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications