20 நாளில் 176 வீடியோக்கள்.. அனைத்தும் பொய்.. விரைவில் சிவசங்கர் பாபா பிரஸ்மீட்.. நடிகர் சண்முகராஜா
சென்னை: சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாகி சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகள், ஆதாரங்கள் போலியானது என நடிகர் சண்முகராஜா பேட்டி அளித்தார்.
Recommended Video
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாகியான சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் போடப்பட்டு பின்னர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றபட்டுள்ளது.
இந்த நிலையில் சிவசங்கர பாபாவின் பக்தரான திரைப்பட நடிகர் ஷண்முகராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் போடப்பட்டதால் உலகம் முழுவதும் உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

20 நாட்கள்
கடந்த 20 நாட்களில் பொய்யான 176 வீடியோக்களை பாபாவுக்கு எதிராக வெளியிட்டு அவதூறை ஏற்படுத்தியுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கையால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவர்கள் அமிர்தா பாலாஜி, ஆசிப் ஆகியோர்தான் இப்படி பாபா மீது பொய் பழி சுமத்துகிறார்கள்.

ஆவணங்கள்
அதனால் காவல்துறை ஒரு தரப்பில் மட்டும் விசாரிக்காமல் இரு தரப்பிலும் விசாரித்து நல்ல முடிவெடுக்க வேண்டும். அமிர்தா பாலாஜி குழு பாபா மீது பொய்யாக அவதூறு ஏற்படுத்துவதற்கான ஆதாரம் குறித்த முக்கிய ஆவணங்களை விரைவில் சிபிஐயிடம் வழங்க உள்ளோம். பாபா சிகிச்சையில் இருந்து திரும்பியதும் செய்தியாளர்களை நிச்சயம் சந்தித்து பேசுவார்.

தொழில்நுட்பக் குழு
மேலும் அரசியல் பிரமுகர்களுக்கு தொழில்நுட்ப குழு பணியாற்றுவது போல், ஒரு தனி குழு நினைத்தால் சமூக வலைதளம் மூலம் ஒருவரை அசிங்கப்படுத்திவிடலாம் என்பதற்கு இதுபோன்ற சம்பவம் ஒரு உதாரணம். ஆதாரத்தோடு போக்சோ வழக்குப் பதிந்தாலும் கூட அந்த ஆதாரமே பொய்யாக உருவாக்கபட்டது என்பதுதான் உண்மை.

ஆதாரங்கள்
குழந்தைகள் நல ஆணையத்தில் உள்ள ஒருவர் அமிர்தா பாலாஜிக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவர் மூலம் இந்த குழு பொய்யாக ஆதாரங்களை தயாரித்துள்ளது. விரைவில் அதுகுறித்த உண்மையான ஆதாரங்களை வெளியிடுவோம். எனவே அரசு இரு தரப்பிலும் தெளிவாக விசாரிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை என்று நடிகர் ஷண்முகராஜா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications