Soori's sorry: "மன்னித்துவிடுங்கள்" இனி இது போல் நடக்காது! ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி
சென்னை: இனி மேல் இது போல் நடக்காது, நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என நடிகர் சூரி, ஒரு ரசிகரிடம் தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. இதிலிருந்து சூரி, அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் ரசிகர்களின் மனக்குமுறல்களை சமூகவலைதளங்களில் படிக்கிறார் என தெரிகிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் சூரி. இவர் ஆரம்பத்தில் திருமதி செல்வம் என்ற சன் டிவி சீரியலில் சஞ்சீவின் மெக்கானிக் ஷெட்டில் பணியாற்றும் கேரக்டரில் நடித்திருந்தார்.
சூரி, மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். தற்போது அவர் அம்மன் உணவகம் என்ற ஹோட்டலை மதுரையில் நடத்தி வருகிறார். அண்மையில் இவர் நடித்த "மாமன்" என்ற படம் ஹிட்டடித்தது. மேலும் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் பஞ்சமியின் 3 குழந்தைகளுக்கும் தாய்மாமன் ஸ்தானத்தில் இருந்து காது குத்து விழாவை நடத்தியிருந்தார்.
அது போல் தியேட்டரில் இந்த படத்தின் இடைவேளையின் போது தனது தாய்மாமனை நினைத்து ஒரு குழந்தை அழுதுக் கொண்டிருந்த போது அந்த குழந்தைக்கு வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் "மண்டாடி" எனும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
ஆக்ஷன் படமாக மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சூரியை டேக் செய்து , எக்ஸ்வலை தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: "அன்புள்ள சூரி அண்ணா, எங்கள் ஊரில் உங்களுடைய படத்தின் ஷுட்டிங் நடந்து வருவது மகிழ்ச்சியே. எங்கள் பகுதி மக்கள் இரவு நேர படப்பிடிப்பில் வேடிக்கை பார்க்க வரும்போது, அவர்களிடம் பவுன்சர்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். தயாரிப்பு நிறுவனத்திடம் கொஞ்சம் சொல்லி வையுங்கள். நன்றிகள்" என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்து வருந்திய சூரி, அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார். அதில், ""தம்பி உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த விஷயத்தை தயாரிப்பு தரப்பிடமும், பவுன்சர்ஸ் சகோதரர்களிடமும் தெரிவிக்கிறோம். இனிமேல் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு சொல்கிறோம். எப்போதும் போல் கிடைக்கும் உங்களுடையே அன்பே எங்களுக்கு பலம். மீண்டும் நன்றி" என குறிப்பிட்டு இருக்கிறார்.
சூரியின் இந்த பதிவையும் அவரது நற்குணத்தையும் பலர் பாராட்டி வருகிறார்கள். பவுன்சர்களை வைத்து ரசிகர்களை தூக்கி அடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் சூரி மன்னிப்பு கேட்டுள்ளது, அவரது நல்ல பண்பை காட்டுகிறது என்கிறார். இது போன்ற அடக்கம்தான் அவரை இந்த அளவுக்கு உயர்வை தந்துள்ளது என பலர் கமென்ட் கொடுத்து வருகிறார்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் "விடுதலை" படத்தில் சூரி, ஹீரோவானார். இதில் அவரது போலீஸ் ரோல் மக்கள் மனதில் இடம் பிடித்தது. அது போல் "கருடன்" எனும் ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். மேலும் கொட்டுக்காளி படத்திலும் தனது நடிப்பாற்றலை சூரி சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.












Click it and Unblock the Notifications