கங்குவா படத்துக்கு சிக்கல்.. அமரனைத் தொடர்ந்து கிளம்பிய புது பிரச்சனை.. நொந்துபோன சூர்யா ரசிகர்கள்
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் வருகிற 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் இந்தமுறை சூர்யா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் தியேட்டர்களில் கங்குவா படத்துக்கான முன்பதிவு தொடங்கவில்லை.
இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிரமாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை, பான் இந்தியா மார்க்கெட்டை குறிவைத்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி கங்குவா ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். ரஜினிகாந்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக சூர்யா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நவம்பர் 14 ஆம் தேதி கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்தனர். படக்குழு இந்தியா முழுவதும் பயணித்து ப்ரொமோசன்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், இந்தாண்டு முதல் பாகத்தை வெளியிட உள்ளனர்.
பாடல்கள், டிரெய்லர், டீசர் வெளியாகி படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சூர்யா நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் தான் திரையரங்கில் வெளியாகியிருந்தது. இதனால் சூர்யா ரசிகர்களும் கங்குவா படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் 11,000 திரைகளில் கங்குவாவை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டனர். பிரமாண்ட பொருட் செலவு, பான் இந்தியா மார்க்கெட் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதியில் படக்குழு மிகவும் கவனமாகவே இருந்தது. போட்டி படங்களால் கங்குவா பிசினஸ் பாதிக்கப் படக்கூடாது என்று நினைத்தனர்.
அதன் காரணமாகவே அக்டோபர் 10 ஆம் தேதியோ, தீபாவளி பண்டிகையின் போதோ கங்குவா ரீலிஸ் ஆகவில்லை. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது. படம் வெளியாகி இரண்டு வாரங்களாகியும், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் குறையவில்லை.
பொதுவாக நன்கு ஓடிக்கொண்டிருக்கும் படங்களை தியேட்டர்களில் இருந்து தூக்க மாட்டார்கள். அதேநிலை தான் அமரன் படத்துக்கும் உருவாகியுள்ளது. கங்குவா படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தாலும் அமரன் படத்துக்கான வரவேற்பை இழக்க தியேட்டர் உரிமையாளர்கள் தயாராக இல்லை என பலர் வெளிப்படையாக கூறியுள்ளனர்.
இந்த சூழலால் பல தியேட்டர்களில் கங்குவா படத்துக்கான முன்பதிவு தொடங்கவில்லை. சில மல்டிபிளக்ஸ்களில் மட்டுமே முன்பதிவு நடந்து வருகிறது. முன்பதிவு தொடங்காமல் இருப்பதற்கு வேறு சில காரணமும் இருக்கிறது.
கங்குவா படம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர்கள் – விநியோகஸ்தர்கள் இடையே இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. வசூலில் சுமார் 75 சதவீதம் விநியோகஸ்தர்கள் கேட்பதாலும் தியேட்டர் உரிமையாளர்கள் முன்பதிவை தொடங்காமல் இருக்கிறார்கள். இதனால் சூர்யா ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications