தரம் தாழ்ந்த பேச்சுகளுக்கு பதில் கூற வேண்டாம்; ரசிகர்களின் கைகளை கட்டிப்போட்ட சூர்யா!
சென்னை: தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதில் கூறி நமது தரத்தை குறைத்துக்கொள்ள வேண்டாம் என சூர்யா ரசிகர் மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக சூர்யா விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில் தனது ரசிகர்களின் கைகளை கட்டிப்போட்டுள்ளார் அவர்.
இது தொடர்பாக சூர்யா ரசிகர் மன்றத் தலைவர் பரமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சூர்யா அண்ணன்
''சூர்யா அண்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெய்பீம் திரைப்படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது. படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும் தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை. அதேநேரம் படத்துக்கு எதிரான கருத்துக்களை ஒரு சிலர் திட்டமிட்டு பரப்பி வருவதையும் நாம் கவனிக்கிறோம்.''

விளக்கம் சொல்லாதீர்
''சூர்யா அண்ணனுக்கு எதிராகப் பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம்சார்ந்த இந்த சமூகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. அதனால் எப்போதும் போல் நாம் பொறுமையாக இருப்பது தான் சிறப்பு. சூர்யா அண்ணன் எந்த சாதி மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை நாம் மட்டும் அல்ல இந்த நாடும் நன்கறியும். அதனால் எவருக்கும் விளக்கமோ, பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.''

அண்ணன் பாதையில்
''கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைதளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன்பெற என்ற அண்ணன் நமக்கு கற்வித்த பாதையில் பயணிப்போம்.''

கட்டுப்பாடு
வன்னியர் சமுதாய அமைப்பினருக்கும், பாமகவினருக்கும் சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்த நிலையில் இப்போது அவர்களை அமைதிகாக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார் சூர்யா. ஒரு நல்ல தலைமைக்கும், ஆளுமைக்கும் இடர்பாடான நேரங்களில் இது போன்ற நிதானமும், பொறுமையும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications