வாழ்த்தும்; பாராட்டும் மன நிறைவை தருகிறது; திருமாவை துணைக்கு அழைக்கும் சூர்யா? பாமகவுக்கு பதிலடி?
சென்னை: அரசாலும், அரசியல் இயக்கங்களாலும் மட்டுமே சமூக மாற்றங்களை உருவாக்க முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு நடிகர் சூர்யா கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video
பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கம் என அவர் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
திருமாவளவனின் வாழ்த்தும், பாராட்டும் தனக்கு மனநிறைவை தருவதாக நடிகர் சூர்யா நெகிழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் சூர்யா எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு;

மன நிறைவு
''மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக இருக்கும் பழங்குடிகள் நலன் சார்ந்து தாங்களும், தங்கள் இயக்கமும் தொடர்ந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் குறிப்பிட்டதை போல, தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது அனைவருக்கும் மிகுந்த மன நிறைவை தந்துள்ளது.''

சூர்யா கடிதம்
''பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி'' எனக் குறிப்பிட்டு நடிகர் சூர்யா கடிதம் எழுதியுள்ளார்.

வன்னியர் அமைப்புகள்
ஏற்கனவே நடிகர் சூர்யா மீது வன்னியர் சமுதாய அமைப்புகள் கோபத்தில் இருந்து வரும் சூழலில், திருமாவுக்கு நன்றி தெரிவித்து அவர் எழுதியுள்ள கடிதம் அவர்களுக்கு மேலும் கோபத்தை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. ஏனெனில் ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து வன்னியர் சமுதாய அமைப்புகள் தரப்பில் எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு, சூர்யா எந்த பதிலும் அளிக்க முன்வராதது குறிப்பிடத்தக்கது.

3 பேருக்கு
முதலமைச்சர் ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் ஆகிய மூவருக்கும் மட்டுமே நடிகர் சூர்யா இதுவரை பதில் கடிதம் எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே ஜெய்பீம் திரைப்படம் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் உளவுத்துறை இதன் மீது ஒரு கண் வைத்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications