"முன்னாடியாவது விஜி என்னை பார்த்து சிரித்தான்".. ஆனால் தீபாவளிக்கு அது கூட இல்லையே! கதறும் தியாகு
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு முன்பு போன போது என்னை பார்த்து சிரித்த விஜயகாந்த் தீபாவளி அன்று போன போது சிரிக்கவே இல்லை. அப்பவே எல்லாம் போய்விட்டது என நடிகர் தியாகு கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சினிமாவில் எத்தனை உயரம் தொட்டாலும் பழசையும் பழைய நண்பர்களையும் மறக்காதவர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். அவர் டாப் ஹீரோ முதல் லைட்மேன் வரை எல்லோரிடமும் அன்பாக பழகுவார். மன்சூர் அலிகான் வீட்டுக்கு திருமணத்திற்கு வந்த போது கிங்காங்கை அருகே உட்காரவைத்து அவரிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.

இது போல் எதிலுமே பேதம் பார்க்கத் தெரியாதவர், உள்ளொன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசத் தெரியாதவர். குழந்தை மனசுக்காரர் என்றெல்லாம் அவரை புகழ்வதுண்டு. அப்படிப்பட்ட விஜயகாந்துக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். 99.99 சதவீதம் எதிரிகளே இருக்க மாட்டார்கள்.
தன்னை பற்றி குடிக்காரர் என பேசிய வடிவேலை கூட மன்னித்து யாராவது அவரை தவறாக பேசினால் கூட அதட்டி அவனை அது போல் பேசாதே என விஜயகாந்த் சொல்வாராம். அது போல் தனக்கு துரோகம் செய்தாலும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்துவாராம். இப்படிப்பட்ட நல்ல மனசுக்காரருக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர்.
அவர்களில் முக்கியமானவர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், தியாகு உள்ளிட்டோர் ஆவர். இந்த நிலையில் தியாகு, விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு விஜி விஜி என்னை விட்டு போய்ட்டியே டா என கதறியபடியே வந்தார்.
அவர் கட்சி அலுவலகத்திற்கும் வருகை தந்தார். அங்கு தியாகு, மன்சூர் அலிகானை பிடித்துக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தார். அப்போது தியாகு கூறுகையில் இனி எங்களுக்கு யார் இருக்கா, எங்களுக்கு நல்லது கெட்டதை யார் சொல்வார்கள். தவசி படம் ஷூட்டிங்கில் நானும் விஜியும் இருந்த போதுதான் சிவாஜி கணேசன் இறந்துவிட்டார் என தகவல் தெரிவித்தார்கள்.
உடனே நாங்கள் வந்தோம். விஜி இல்லாமல் இருந்திருந்தால் சிவாஜி கணேசன் ஊர்வலம் அத்தனை அமைதியாக நடந்திருக்காது. தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு விஜயகாந்தை வீடு தேடி போய் பார்த்த போது என்னை பார்த்து சிரித்தான். ஆனால் தீபாவளி அன்று அவன் கைகளை பிடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சிரிக்கவே இல்லை. அப்போதே எல்லாம் முடிந்து போய்விட்டது. தினமும் அவனுடைய அலுவலகத்தில் புளியோதரை போடுவான். நானும் ஷூட்டிங் கேப்பில் வந்து சாப்பிட்டுள்ளேன் என தியாகு கண்ணீருடன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications