சார் அந்த ஒன்றிய அரசு.. கேள்வி கேட்ட நிருபர்.. எஸ்கேப்பாக அங்கிட்டும் இங்கிட்டும் கபடி ஆடிய வடிவேலு!
சென்னை: ஒன்றிய அரசு குறித்து கேட்ட நிருபருடன் நடிகர் வடிவேலு கபடி விளையாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகர் வடிவேல்- மீம்ஸ் கிரியேட்டர்களின் பிழைப்பு ஓடுவதற்கு இவரது ஸ்டில்களும் ஒரு காரணம் ஆகும். திரைப்படங்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் நகைச்சுவையால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் வைகை புயல் வடிவேலு.
இவர் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ 5 லட்சம் கொரோனா நிதி வழங்கினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

சினிமாவில் நடிப்பது
அப்போது அவர் பேசுகையில் சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து கேட்கிறீர்கள். நல்லதே நடக்கும். சினிமா இப்போது குட்டி போட்டு வருகிறது. சீரியல், வெப் சீரிஸ் என குட்டி போடுகிறது. முதல்வர் ஸ்டாலின் கொரோனாவை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்திவிட்டார்.

கொரோனா ஊசி
ஏற்கெனவே 2 கொரோனா ஊசிகளை போட்டுக் கொண்டேன். இன்னும் 40 ஊசி போடச் சொன்னாலும் போடுவேன். அனைவரும் முன்வந்து ஊசி போட வேண்டும். தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி பொற்காலமாக இருக்கும் என்றார். அப்போது அவரிடம் கொங்கு நாடு குறித்த கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர்.

ஒரத்தநாடு
அதற்கு அவர் ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கே. எதற்கு புதிதாக ஒரு கொங்கு நாடு? தமிழ்நாடு நல்லா இருக்கு, எதுக்கு அதை பிரிக்கணும். நான் அரசியல் பேசவில்லை. இதையெல்லாம் கேட்கும் போது தலை சுத்துது என்றார்.

ஒன்றிய அரசு
பின்னர் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கிறார்களே அது குறித்து உங்கள் கருத்து என்ன என தொலைகாட்சி நிருபர் ஒருவர் வடிவேலுவிடம் கேட்டார். அதற்கு அவர் ஒன்றிய அரசு குறித்தெல்லாம் சட்டசபையில் முதல்வர் விளக்கம் கொடுத்துட்டாரே. சந்தேகம் இருந்தால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு கபடி விளையாடுவது போல் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடினார்.












Click it and Unblock the Notifications